பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, முக்கிய எதிர்கட்சியான தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்து சர்ச்சையை கிளப்பியது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalism) இந்த தகவலை வெளியிட்டது.
கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்களை பிரபலங்கள் பனாமா நாட்டில் பதுக்குவதற்கு, அந்நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் உதவியதும் அம்பலமானது.
இந்த பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கால்பந்து வீரர் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், விசாரணை நடத்த சிறப்பு கூட்டு புலனாய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இக்குழு முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமர், அவரது குடும்பத்தினர், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் என அனைவரும் ஆஜராகி பதிலளித்தனர்.
சிறப்பு கூட்டு புலனாய்வுக் குழுவினரின் விசாரணை முடிவடைந்ததையடுத்து, இந்த குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதில் இம்ரான் கானின் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சி முக்கிய பங்காற்றியது. நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அக்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீது நேற்று திர்ப்பளித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும், தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சமான் கைரா கூறுகையில், "நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எதிர்பாரதது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் வரை கொண்டு சென்று போராடிய இம்ரான் கானின் கட்சிகே இந்த வெற்றி சேரும்" என புகழாரம் சூடியுள்ளார். அதேபோல், பாகிஸ்தானின் பிற கட்சிகளும் இம்ரான் கானுக்கு தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சி, பாகிஸ்தானில் அடாவடி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இது நல்ல விஷயம். உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி இது என தெரிவித்துள்ளது.