பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்த பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்து சர்ச்சையை கிளப்பியது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalism) இந்த தகவலை வெளியிட்டது.
கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்களை பிரபலங்கள் பனாமா நாட்டில் பதுக்குவதற்கு, அந்நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் உதவியதும் அம்பலமானது.
இந்த பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கால்பந்து வீரர் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், விசாரணை நடத்த சிறப்பு கூட்டு புலனாய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இஜாஸ் அப்சல் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, நவாஸ் ஷெரீப் சார்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவருக்கு ஆதரவாக அவரது மகன்கள், மகள் மரியம் நவாஸ் ஆகியோரும், பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் டர் ஆகியோரும் நவாஸ் ஷெரிப்பின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, ஏற்கனவே நவாஸை தகுதி ணீக்கம் செய்து உத்தரவிட்ட நீதிபதி இஜாஸ் அப்சல் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என நவாஸ் ஷெரிப், அவரது மகன்கள், மகள் சார்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவாஸ் ஷெரிப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். தள்ளுபடிக்கான காரணம் குறித்த விபரங்கள் பின்னர் முழுமையாக வெளியிடப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.