பாங்காக்: தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் சாலையோர கடைகள் அகற்றப்பட மாட்டாது என்று அந்நாட்டின் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கோப்கார்ன் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து போகும் பகுதியாக இருந்து வருகிறது. அதோடு, மட்டுமல்லாமல் உள்ளூர் வாசிகளும் அங்கு எப்போதும் அதிகம் நிறைந்தே காணப்படுவர். இதன் காரணமாக அங்குள்ள சாலைகளின் ஓரத்திலும், தெருக்களிலும் சின்னச் சின்னதான கடைகள் அதிகம் நிறைந்தே காணப்படுகிறது.
இதில் முக்கியமாக உணவகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆடைகள் விற்பனை செய்யும் கடைகளும் அங்கு அதிகமாகவே இருந்து வருகின்றன. கூட்டத்தில் இருக்கும் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து சொல்லவா வேண்டும். சில கடைகளில் போலியான பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கடைகளை பொறுத்தமட்டில், விலை குறைவு என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சிறு உணவகங்களை நாடி வந்து கொண்டு தான் இருக்கின்றனர். பெரிய பெரிய ஹோட்டலுக்கு போனால் பர்ஸ் காலியாகி விடும் என்பதனால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாங்காக்கின் முக்கிய சாலைகளின் ஓரத்தில் உள்ள உணவகங்கள் அகற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகின. இதற்கு சாலையோர வர்த்தர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், பாங்காக்கில் சாலையோர கடைகள் அகற்றப்பட மாட்டாது என்று அந்நாட்டின் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கோப்கார்ன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கோப்கார்ன் கூறியதாவது: பாங்காக் பகுதியில் உள்ள சாலையோர கடைகள் அகற்றப்பபடமாட்டடாது. சாலையோர கடைகளில் என்பது நம் வாழ்வின் ஓர் அங்கம் போல் ஆகிவிட்டது என்று கூறினார்.
பாங்காக் மாநகராட்சி நிர்வாகம் அதன் கொள்கையின் அடிப்படையில் சில சாலையோர உணவகங்களை அகற்றியுள்ளது. மேலும், இதுபோன்ற உணவகங்கள் தரமான உணவை அளிக்கும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் சாலையோரத்தில் அழுக்கடைந்த தண்ணீரை ஊற்றுகின்றனர் என்றும், இதை தவிர்க்க வேண்டும் என்று கோப்கார்ன் தெரிவித்தார். இதனிடையே, பாங்காக்கில் சாலையோர உணவகங்களுக்கு என்றுமே தனிச்சிறப்பு தான் என்றும் அவை தொடரும் என்றும் சுற்றுலாதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பாங்காக் பகுதியில் சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் அங்குள்ள 400-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருக்கும் சாலையோர கடைகள் அகற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், அப்பகுதியை சுகாதாரமாக வைத்திருக்கும் நோக்கில் யாவாரத் சாலை, சீனாடவுண் உள்ளிட்ட பிரபலமான பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று சின்குவா செய்தி நிறுவனம் முன்னதாக செய்தி வெளியிட்டது.
மேலும், தலைநகரான பாங்காக்கை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கும் வகையில், அங்குள்ள 50 மாவட்டங்களில் இந்த ஆண்டிற்குள் தெருவோர மற்றும் சாலையோர கடைகள் அகற்றப்படும் என தாய்லாந்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.
இந்த நிலையில்,பாங்காக் மாநகராட்சியானனது சாலையோர கடைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், சாலையோர உணவகங்கள் சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.