மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் கற்பிக்காமை, மாணவர்களை துன்புறுத்துதல், உடல் ரீதியாக தாக்குதல், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பாகிஸ்தானில் ‘மீசை’ வைத்ததற்காக ஆசிரியர் ஒருவர் பள்ளியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். மீசை வைத்ததால் பணி நீக்கமா? என ஆச்சரியாக இருக்கிறதா? ஆசிரியர் மீசை வைத்திருப்பது மாணவர்களுக்கு சுதந்திரமான, தன்னிச்சையான முடிவுகளை எடுக்கத் தூண்டும் எனக்கூறி, அந்த ஆசிரியரை இடை நீக்கம் செய்திருப்பதுதான் இதில் ஆச்சரியமே.
ஹசீப் என்பவர்தான் அந்த ஆசிரியர். இவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பல பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். இவரை பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பின், அதுகுறித்த தனது கோபத்தையும், ஆதங்கத்தையும் தன் முகநூல் பக்கத்தில் வெளிப்படுத்தினார். பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளில் மனநிலைமை குறித்தும் அதில் அவர் பதிவிட்டார்.
””உன்னுடைய மீசை மாணவர்களை சுதந்திரமாக இயங்க தூண்டும்”, “நீ அழகாக, இளமையுடன் இருப்பதால், மாணவிகளின் கவனத்தை திசை திருப்புகின்றனர்”, எனக்கூறி ஒருவரை பணிநீக்கம் செய்வது கேலியாக உள்ளது.”, என பதிவிட்டார்.
மேலும், எதிர் பாலினத்தவர்களிடம் பேசுவதற்கு மாணவர்களுக்கு அபராதம் விதிப்பது, தங்களது பள்ளிகளில் மாணவர்கள் கட்டுக்கோப்பாக இருப்பதற்காக பெருமை கொள்வது, நாடகம், நடனம் உள்ளிட்டவற்றை ஆபாசம் என புறக்கணிப்பது ஆகியவை பள்ளிகளில் அதிகரித்து வருவதாக அவர் தன் பதிவில் குறிப்பிட்டார்.
பள்ளியில், ”ஒரு மாணவி, மாணவரிடம் பேசுவது நன்னெறி அல்ல என நினைப்பதுதான் தவறு.”, என பதிவிட்டார்.
இவர் தற்போது சமூக மாற்றத்திற்கான நாடக அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், ஏழை குழந்தைகளுக்கான நாடக பயிற்சி பள்ளியை ஆரம்பிப்பதுதான் அவருடைய எதிர்கால திட்டம்.