சீனாவில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, அங்குள்ள கிராமம் ஒன்றில் பிரம்மாண்டமான க்யூ.ஆர்.கோடு பல மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. இதனை ஸ்கேன் செய்யவும் முடியும் என்பது ஆச்சர்யம்.
‘க்விக் ரெஸ்பான்ஸ்’ (Quick Response) எனப்படும் க்யூ.ஆர்.கோட்-ஐ ஸ்கேன் செய்தால் ஒருவர் தான் விரும்பிய தளங்களுக்கு செல்ல முடியும்.
சீனா மக்களுக்கும், க்யூ.ஆர்.கோடுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. சீனாவின் மக்கள் தொகையில் பாதி பேர் பல்வேறு பண பரிமாற்றங்களை க்யூ.ஆர்.கோடு மூலமாகத்தான் மேற்கொள்கின்றனர். பெரிய மால்களிலிருந்து தெருவோர கடைகள் என எல்லாவற்றிலும் க்யூ.ஆர்.கோடு மூலமாகவே பண பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலு, பைக், கார் இவற்றை வாடகைக்கு எடுக்கவும், அவ்வளவு ஏன், இதன்மூலமாகத் தான் பிச்சைக்காரர்களுக்கு பணமும் அளிக்கின்றனர்.
க்யூ.ஆர்.கோடு மீதான விருப்பத்தை வெளிப்படுத்த சீன மக்கள், இன்னும் ஒருபடி மேலேயே சிந்தித்துள்ளனர். வடக்கு சீனாவில் உள்ள கிராமம் ஒன்றில் பிரம்மாண்டமான க்யூ.ஆர்.கோடு வடிவிலான நிலப்பரப்பை கிராம மக்கள் உருவாக்கியுள்ளனர். சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வடக்கு சீனாவில் உள்ள சின்லுன்ஷி என்ற கிராமத்தில் இந்த பிரம்மாண்ட க்யூ.ஆர்.கோடு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,30,000 ஜூனிபர் மரங்கள் க்யூ.ஆர்.கோடு வடிவில் நடப்பட்டுள்ளன. இந்த மரத்தின் அளவானது, 80 சென்டி மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை உள்ளன. வெள்ளை, கருப்பு நிற வடிவத்தில் இவை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவெறும் காட்சிக்காக மட்டும் இல்லை. இந்த பிரம்மாண்டமான க்யூ.ஆர்.கோட்-ஐ ஸ்கேன் செய்யவும் முடியும். சுற்றுலா பயணிகள் இந்த க்யூ.ஆர்.கோட்-ஐ ஸ்கேன் செய்தால் WeChat எனும் இணையதளத்துக்கு செல்ல முடியும். அதில், சுற்றுலா குறித்த எல்லா தகவல்களையும் அவர்கள் பெற முடியும்.
இதேபோல், சீனாவில் ஏற்கனவே பிரம்மாண்டமான பாண்டா வடிவிலான சோலார் பேனல்கள் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.