பயங்கரவாத செயல்களுக்கு துணை போகும் வகையில் கருத்துகளை தெரிவித்ததற்காகவும், அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் கூறி, கத்தார் நாட்டுடனான தூதரக உறவை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய 5 நாடுகள் திடீரென துண்டித்தன.
அமீரகத்தில் தங்கியிருக்கும் கத்தார் நாட்டை சேர்ந்தவர்கள் 14 நாட்களுக்குள் நாடு திரும்பவும், தூதரக அதிகாரிகள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் கத்தார் நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதே நிலை தான் எகிப்திலும். இன்று முதல் கத்தார் நாட்டிற்கான விமான போக்குவரத்திற்கு முற்றிலும் தடை விதித்துள்ளது எகிப்து. தங்கள் நாட்டில் இருக்கும் கத்தார் கப்பல்களை உடனடியாக வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், 3 லட்ச கேரள மக்கள் உட்பட ஆறரை லட்சம் இந்தியர்கள் கத்தாரில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எரிவாயு நிறுவனம் மற்றும் கட்டுமான துறையில் பணியாற்றி வருபவர்கள் ஆவர். 2022–ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காகவும் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
கத்தார் மீது அரபு நாடுகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் காரணமாக அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி மத்திய அபிவிருத்தி ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி இருதயராஜன் கூறுகையில், ‘‘கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் பீதி அடைய தேவையில்லை. அவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையால் நிச்சயம் தெற்காசிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கத்தாரில் எதிர்கால பலன்களே அதிகம் இருக்கும்’’ என்றார்.
பெட்ரோநெட்டின் நிதித் தலைவர் ஆர்.கே. கார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவிற்கு இதில் எந்தவித தாக்கமும் ஏற்படும் என்று நினைக்கவில்லை. நமக்கு கத்தாரில் இருந்து நேரடியாக எரிவாயு கிடைக்கிறது. எனவே எரிவாயு–எரிசக்தி இறக்குமதி உடனடியாக பாதிக்கும் வாய்ப்பில்லை’’ என்றார்.