பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்திப் பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா, புதன்கிழமை (ஆக.16) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் வழிபட வரும் பக்தர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி 5 நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
14 முதல் 18ஆம் தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது.
பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டுமே கோவிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது. 18ம் தேதி குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.
தங்கும் குடில் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு 18ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், 19ஆம் தேதி காலை 6 மணி முதல் காலை 11 மணி வரையிலும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும்.
கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.
19ஆம் தேதி காலை 11 மணிக்கு பிறகு 21ஆம் தேதி வரை தூய்மை பணிகள் மற்றும் கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
22ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்கு சென்று வரலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மலைக் கோயிலில் இரவில் தங்குவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக தானிப்பாறை அடிவாரம் பகுதிகள் மற்றும் பக்தர்கள் மலைப் பாதை வழியாக செல்லக்கூடிய மலை பாதைகளிலும் கோவில் வளாகப் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையில் ஏறி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபாடு நடத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.