காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டுக்குள் 60,000-ஆகவும், 2100-க்குள் 2,60,000-ஆகவும் அதிகரிக்கும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ’நேச்சர் கிளைமெட் சேஞ்ச்’ (Nature Climate Change) என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல், அதனால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து, அதன் மூலம் காற்று மாசுவடுவதற்கான வேதியியல் விளைவுகள் அதிகரிக்கும் என தெரியவந்தது. காற்றில் பரவும் தூசு, மழையில்லாமை, வறண்ட சூழ்நிலை, உள்ளிட்டவை காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் காரணிகளாகும். மரங்கள் காற்று மாசுபடுதலை உள்வாங்கும்போது, மரங்களும் அந்த மாசுபாட்டை உருவாக்கும் இயற்கை வாயுக்களை வெளியிடும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”பருவநிலை மாற்றத்தால் காற்று மாசுபாட்டின் தாக்கம் அதிகரிக்கும்போது, உலகளவில் மக்களின் ஆரோக்கியம் மீது பெரும் விளைவுகள் ஏற்படும். காற்று மாசுபாட்டால் வருடத்திற்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பர்”, என ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜேசன் வெஸ்ட் கூறுகிறார்.
2030 மற்றும் 2100-ஆம் ஆண்டுகளில் ஓசோன் மற்றும் காற்று மாசுபாட்டு துகள்களால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க, பல உலகளாவிய பருவநிலை மாதிரிகளை ஆய்வுக்குழுவினர் பயன்படுத்தினர்.
எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்திற்கான காரணங்களை ஆய்வுக்குழு மதிப்பிட்டது.
எட்டு பருவநிலை மாதிரிகளில் ஐந்து மாதிரிகள் 2030-ஆம் ஆண்டில் அதிகமான சராசரி வாழ்நாள் காலத்திற்கு முன்பே நிகழக்கூடிய இறப்புகள் நிகழும் என்பதை உறுதிப்படுத்தியதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதேபோல், 9 பருவநிலை மாதிரிகளில் 7 மாதிரிகள் 2100-ஆம் ஆண்டில், சராசரி வாழ்நாள் காலத்திற்கு முன்பே நிகழக்கூடிய இறப்புகளை அதிகரிக்கும் என ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
"இந்த ஆய்வு முடிவுகளிலிருந்து பருவநிலை மாற்றத்தால், காற்றின் தூய்மை மற்றும் ஆரோக்கியத்தை சீரழித்துவிடும் என்பதற்கான அறிகுறி என்பது தெரிகிறது.”, என பேராசிரியர் ஜேசன் வெஸ்ட் கூறுகிறார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள், சுத்தமான நீர் மற்றும் உணவை அழித்தல், கடுமையான புயல்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஆகியவற்றின் மூலம் சுகாதாரத்தை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.