அமீர் பிரபல நடன இயக்குநர். பிரபுதேவாவின் தீவிர ரசிகர். நடனத்தின் மீது கொண்ட தீராத காதலால், ஏடிஎஸ் க்ரூ ஊட்டி என்ற நடனக் குழுவை நிறுவினார். கிங்ஸ் ஆஃப் டான்ஸ், டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் மற்றும் இந்திய ஹிப்ஹாப் டான்ஸ் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு நடனப் போட்டிகளில் அவரது நடனக் குழு பல விருதுகளை பெற்றுள்ளது.
Advertisment
பிபி ஜோடிகள் சீசன் 1 நடன நிகழ்ச்சியிலும், இவர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு சில திரைப்படங்களுக்கும் இவர் கோரியோ செய்திருக்கிறார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் அமீருக்கு மிகப்பெரிய அறிமுகம் கிடைத்தது. வீட்டுக்குள் நுழைந்த சில நாட்களிலே அமீர் காதல் புரோமோவிலும் இடம் பிடித்தார். இவர் பாவனியுடன் செய்யும் குறும்புகள் இணையத்தில் பயங்கர டிரெண்ட் ஆகியது.
ஆனால் எப்போதும் துறுதுறுவென இருக்கும் அமீர் தனது இளவயதில் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். அமீர் தனது ஒரு வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். ஆனால் அமீருக்கு 16வது வயது இருக்கும்போது, அவரின் அம்மா கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அமீரும், அவருடைய அண்ணனும் ஒரு சிறிய ஆசிரமத்தில் தான் வளர்ந்து வந்தனர்.
இப்படி வளரும் வயதில் பல கொடுமைகளை அனுபவித்த அமீர், படிப்படியாக முன்னேறி சொந்தமாக நடன நிறுவனத்தை தொடங்கி, இன்று பிரபலமான நடன இயக்குநராகி விட்டார்.
இந்நிலையில் பிபி ஜோடிகள் பைனல்ஸ் எபிசோடில் அமீர் தான் கடந்து வந்த பாதையை பற்றி பேசினார். அதில் அமீரின் பெரியம்மா, அண்ணன், அக்கா, மற்றும் அமீரை வளர்த்த அஷ்ரஃப் வந்திருந்தனர்.
அப்போது பேசிய அமீர்; நான் பிளஸ் 2 படிக்கும்போது என் அம்மா இறந்தாங்க. அவங்கள தூக்கிறதுக்கு கூட யாரும் இல்லை. நான் என் அண்ணா, பெரியம்மா, அக்கா தான் இருந்தோம். என் அம்மா உடம்பு தூக்கும்போதுதான், இறந்தவங்க உடம்பு எவ்வளவு வெயிட்டா இருக்கும் தெரிஞ்சது. நான் பிபி வீட்டுக்குள்ள போனபிறகுதான், என் அண்ணன் கிட்டயே நான் பேசினேன். அதுவரைக்கும் என் அம்மா இறந்ததுக்கு அவனும் ஒரு காரணும் அவன்கிட்ட நான் பேசவே இல்லை.
என்னைவிட என் அண்ணன் தான் அம்மா மேல ரொம்ப பாசம் வச்சிருந்தான். என்னைவிட நல்ல டான்ஸர். ஆனா அதெல்லாம் விட்டுட்டு இப்போ மூட்டை தூக்கிட்டு இருக்கான் நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும். அதுக்குபிறகு அஷ்ரஃப் சார், ஷைஜி மேம் என் லைஃப்ல கிடைச்ச பெரிய கிஃப்ட். அவங்க இல்லன்னா, நான் இங்க வந்துருப்பேனா சத்தியமா தெரியல.
என் வாழ்க்கையில நிறைய நடந்தது. என்னோட டான்ஸ் கிளாஸ மூட வச்சாங்க, என்கிட்ட காசு இல்ல. வக்கீல், கோர்ட், கேஸ் அலையும்போது, வக்கீலுக்கு எல்லா செலவயும் பாத்துட்டு இருந்தேன். ஆனா, ஒருநாள் கையில காசு இல்ல. நான் தயங்கி அஷ்ரஃப் சார்கிட்ட போய் கேட்பேன். அவர் பாக்கெட்ல இருக்கும், எடுத்துக்கோப்பா தானு சொல்லுவாரு. இப்போ நான் அழுகுறேன், ஆனா அலினா முகத்தை பார்த்து ரெண்டு நிமிஷம் கட்டிபிடிச்சா போதும் என்னோட எல்லா கவலையும் பறந்துடும். அலினா, ஐஷூ என் இதயதுடிப்பு மாதிரி. அவங்க ரெண்டுபேரும் இல்லன்னா என்னால ஒரு செகண்ட் இருக்க முடியாது.
அஷ்ரஃப், ஷைஜி மேம் எனக்காக அவங்க மொத்த குடும்பத்தையும் தூக்கி போட்டாங்க. இப்போ யார்கிட்டயும் கூட அவங்க பேசிக்கிறது இல்ல. யாருக்குமே வாழ்க்கையில இப்படி கிடைப்பாங்களா தெரியாது. நான் ரொம்ப ஆசிர்வதிக்கப்பட்டவன்னு அமீர் கண்கலங்கினார்.
இதைக்கேட்ட அஷ்ரஃப் அமீர் தான் எங்களுக்கு கிடைக்க கிஃப்ட் என்று கூறினார்.
இதற்கு நடுவே, பிபி ஜோடிகள் சீசன் 2வில் அமீர் பாவனி, ஃபைனல்ஸ் வரை வந்து, இறுதியில் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
இந்நிலையில் பாவனி தனது இன்ஸ்டாவில், சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, நடனம் எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது, அதுவும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் அடியெடுத்து வைப்பது இன்னும் பயமாக இருந்தது, ஆனால் நீங்கள் சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபித்தீர்கள், நடனமாட தெரியாதவரைக் கூட, நடனமாடச் செய்து, அவளை வெற்றி பெறச் செய்யத் தெரிந்தவர்.
இது உனக்கு மிகப்பெரிய பணி என்று எனக்குத் தெரியும். மேலும் இது ஒரு அற்புதமான பயணம், இதன் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசிப்பேன். உன்னை அதிகம் தெரிந்து கொண்டேன், உன்னிடமிருந்து பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
நீங்கள் ஒரு சிறந்த மாஸ்டர், சிறந்த நண்பர். எனவே இப்போது நாம் ஒன்றாக நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவோம். என் சிறந்த வாழ்க்கை துணையாகும், அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். அமீர் நீ என்றென்றும் என்னுடையவனாக இருப்பாய். ஐ லவ் யூ என்று அதில் பதிவிட்டுள்ளார்.
அந்த இன்ஸ்டா போஸ்டுக்கு விஜே பிரியங்கா, டேய் பொண்ணு ஒகே சொல்லிச்சு டா என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அமீர், பாவனி ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“