தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆகியவை மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஆன்மிக பயணத்தை அறிவித்துள்ளன.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புகழ் பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் செய்யும் வகையில் இந்த ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூா் ஆகிய நகரங்களில் உள்ள புகழ் பெற்ற அம்மன் கோயில்களைத் தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வருகிற 17-ஆம் தேதி தொடங்க உள்ளது.
சென்னையில், பாரிஸில் உள்ள காளிகாம்பாள் கோயில், ராயபுரத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில், திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயில், மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் கோயில், முண்டககன்னியம்மன் கோயில், மாங்காட்டில் உள்ள காமாச்சி அம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் மற்றும் பிற கோயில்களில் ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வண்டியூா் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயில், இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயில், அழகா்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அனைத்து கோவில்களிலும் அம்மன் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளன.
நிகழாண்டு ஆடி மாதத்தை முன்னிட்டு ஒரு நாள் ஆடி அம்மன் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்கள் www.ttdconline.com என்ற இணையத்தின் மூலமாகவும் ஓட்டல் தமிழ்நாடு அழகர் கோவில் ரோடு, மதுரை என்ற முகவரியிலும் பதிவு செய்யலாம்.
இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 63806 99288, 91769 95841 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“