கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாள்தான் சரஸ்வதி பூஜை.
இது நவராத்திரி திருவிழாவின் மிக முக்கியமான பகுதியாகும். அரக்க மன்னன் மகிஷாசுரன் 8 நாட்கள் கடுமையான போருக்குப் பிறகு துர்கா தேவியால் கொல்லப்பட்டான். அசுர ராஜாவைக் கொன்ற பிறகு, தேவியின் ஆயுதங்கள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இதை நினைவுகூரும் வகையில், மக்கள் இந்நாளில் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் கருவிகளை வழிபடுகின்றனர். பல இடங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் இது சரஸ்வதி பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதியை வழிபடுவதற்கு முன்னதாக, பூஜை செய்யும் இடத்தை கழுவி, துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, முதலில் விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.
சரஸ்வதி படத்துக்கு மல்லி, சம்பங்கி, வெண் தாமரை போன்ற வெள்ளை நிற மலர்களால் அலங்காரம் செய்யலாம். சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் முதலானவற்றை நைவேத்தியமாகப் படைப்பது சிறப்பு வாய்ந்தது. மேலும், பொரி, கடலை, அவல், நாட்டுச் சர்க்கரை மற்றும் பழங்களையும் படையலுக்கு வைக்கலாம்.
சரஸ்வதி தேவியின் படத்துக்கு முன்பாக, புத்தகங்கள், பேனா ஆகியவற்றை வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து வழிபட வேண்டும். இல்லத்தில் ஒரு குழந்தைக்கு மேல் இருந்தால், ஒவ்வொருவருடைய பொருளையும் பூஜையில் வைக்க வேண்டும்.
கல்வியோடு கூட, நாம் செய்யும் தொழிலும் போற்றத்தக்கது என்பதால், இதே நாள் ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தினசரி நம் வாழ்வில் பயன்படுத்தும் சிறிய கத்தி, கரண்டி, வாகனங்கள் உட்பட அனைத்து கருவிகளையும் கழுவி, சுத்தம் செய்து சந்தனம், குங்குமம், விபூதி இட்டு, மலர்களால் அலங்கரித்து வழிபட வேண்டும். அலுவலகங்களில் இயந்திரங்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
விஜயதசமி அன்று, மாணவர்கள் முன்தினம் பூஜையில் வைத்த புத்தகத்தை எடுத்து, சரஸ்வதியின் அருள் பரிபூரணமாக அமையட்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு படிக்கவும். தொழில் கருவிகளைக் எடுத்து வைத்து, தொழில் சிறப்பான முறையில் மேன்மையடையப் பிரார்த்தனை செய்து அன்றைய தொழிலைத் துவக்க வேண்டும்.
மேலும் விஜயதசமி நாளில் படிப்பைத் தொடங்கினால் குழந்தைகள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் அன்று கோயில்களில், குழந்தைகளை தமிழின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை விரலைப் பிடித்து எழுதச் செய்து அகரம் பழக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள்.
தமிழகத்தில் இந்த ஆண்டு செவ்வாய், புதன்கிழமைகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரங்கள் இங்கே!
சூரிய உதயம்- அக்டோபர் 04, 2022 காலை 6:23-
சூரிய அஸ்தமனம் அக்டோபர் 04, 2022 மாலை 6:07
நவமி திதி அக்டோபர் 03, 2022 மாலை 4:38 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 04, 2022 மதியம் 2:21 மணியுடன் முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“