தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ஆம் ஆண்டு, கைதிகளுக்கான பெட்ரோல் பங்க், சென்னை மத்திய புழல் சிறையில் முதல் முறையாக திறக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து வேலூா், கோயம்புத்தூா், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை சிறுவா் சீா்திருத்தப்பள்ளி ஆகிய 4 இடங்களில் சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்க்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து தமிழ்நாடு சிறைத்துறையால் நடத்தப்படும் இந்த சில்லறை விற்பனை நிலையங்கள், ஃப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேஷன் என்ற பிராண்டின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
சிறையில் நல்ல நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்ட பின்னா், இந்த பெட்ரோல் பங்குகளில் பணியமா்த்தப்படுகின்றனா்.
அந்தவகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக புழல் அம்பத்தூா் சாலையில் பெண் கைதிகளே நடத்தும் பெட்ரோல் பங்குகளைத் திறக்க சிறைத்துறை முடிவு செய்தது.
இதற்காக புழல் அம்பத்தூா் சாலையில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ.1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டா் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக சட்டம், நீதி, சிறைகள் சீா்திருத்தப்பணிகள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: புழல் பெண்கள் தனி சிறை அருகே அமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் பெட்ரோல் விற்பனை நிலையம், இந்தியாவிலேயே பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் முதல் பெட்ரோல் விற்பனை நிலையம்.
இங்கு பணிபுரியும் பெண் சிறைவாசிகள் தற்போது மாதம் ரூ. 6 ஆயிரம் தங்கள் குடும்பத்துக்கு அனுப்பக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளனர். விரைவில் அவர்கள் ரூ. 10 ஆயிரத்தை தங்கள் குடும்பத்துக்கு அனுப்பக்கூடிய வாய்ப்பு உருவாக்கி தரப்பட உள்ளது, என்றார்.
மேலும் டிஜிபி அமரேஷ் பூஜாரி பேசும் போது, ”பெண் கைதிகளால் இயக்கப்படும் இந்த பெட்ரோல் பங்க், அவா்களின் சீா்திருத்தத்துக்கும், மறுவாழ்வுக்கும், சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணையவும் உதவும்.
பெண் கைதிகள் சிறையில் இருந்து விடுதலையான பின்னா், எளிதாக வேலை பெறுவதற்கு வாய்ப்பை பெற்று தரும். இந்த வேலை பெண் கைதிகளுக்கு பொறுப்பு, கண்ணியம், சுய மதிப்பு ஆகியவற்றைக் கொடுத்து நம்பிக்கையையும், மன உறுதியையும் அதிகரிக்கும்” என்றார்.
முழுக்க முழுக்க இந்த பெட்ரோல் நிலையத்தில் காலை நேரத்தில் பெண் சிறைவாசிகள் மட்டுமே பணியமர்த்தப்படுவர். மொத்தம் இரண்டு ஷிப்ட் வாரியாக பணிகள் பிரிக்கப்பட்டு, காலை நேரத்தில் முதல் ஷிப்டில் 20 பெண் கைதிகளும், மதியம் வரக்கூடிய இரண்டாவது ஷிப்டில் 20 பெண் கைதிகளும் என மொத்தம் 40 பெண் கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேரத்தில் வழக்கம் போல அந்த பெட்ரோல் நிலையத்தில் 20 ஆண்கள் பணியில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.