ஓட்ஸ் முதல் தேன் வரை, எந்த உணவுப்பொருள், இந்த ஊரடங்கு நாளில் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்த ஊரடங்கால் நாம் வீட்டுக்குள்ளேயே இருப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், அது நாம் மீண்டும் நல்ல உடல்வாகை பெறுவதற்கு வழிவகுக்கும். எனினும், நாம் வீட்டிலே இருப்பதால், மனம் எதையாவது சாப்பிட தூண்டிக்கொண்டே இருக்கும். அப்போது எதையாவது சாப்பிட்டுவிட்டு, அதனால் உடல் எடை கூடி, இந்த ஊரடங்கு காலம் முடிந்து வெளியே வருகையில் சில கிலோக்கள் எடை கூடியிருக்க வாய்ப்புள்ளது. இந்த சூழலை எப்படி சமாளிப்பது அல்லது சூழலை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்து தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தீர்கள் என்றால் தொடர்ந்து படியுங்கள். எந்த வகை உணவுப்பொருட்கள் உங்கள் எடையை அதிகரிக்க விடாமல் இருக்கச்செய்யும் என்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அதை உங்கள் ஊரடங்கு நாட்களில் நீங்கள் வீடடங்கியிருக்கும்போது முயற்சித்துப்பாருங்கள்.
சீனி துளசி
உங்களின் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை முற்றும் முழுதாக தவிர்த்துவிடுங்கள். அது உங்கள் உடலுக்கு ஒரு நன்மையையுமே செய்யவில்லை. அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மட்டும் உயர்த்தவில்லை. உங்கள் உடல் வழியாக இன்சூலின் வெள்ளமென பாய்வதற்கு வழிவகுக்கிறது. இது உங்கள் வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிறது. கயா நிறுவனத்தின் இயக்குனர் டாலி குமார் கூறுகையில், வெள்ளை சர்க்கரைக்கு பதில் சீனி துளசியைப் பயன்படுத்துங்கள் என்கிறார். அது மீத்தி துளசி என்றும் அழைக்கப்படுகிறது. இது 100 சதவீதம் சர்க்கரைக்கு மாற்றான கலோரிகள் குறைவான இயற்கை உணவு என்றார். இது இயற்கை மூலிகையிலிருந்து பெறப்படுகிறது. இதில் அஸ்பார்டமி இல்லை. பக்கவிளைவுகளும் இல்லை. இது இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் எடையை குறைக்கும் எண்ணம் உடையவர்களுக்கு நன்மை கொடுப்பதாக உள்ளது.
மியுஸ்லி(Museli)
உணவில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் இருக்க வேண்டும் என்று குமார் கூறுகிறார். இதற்கு அவர் மியுஸ்லியை பரிந்துரைக்கிறார். இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. கொழுப்பு இல்லாதது. இது இதயத்திற்கும் நல்லது. கொழுப்பு குறைவான மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள மியுஸ்லியை காலை உணவாக எடுத்துக்கொள்வது, எடை குறைப்பதற்கும், உடலின் சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்று குமார் கூறுகிறார். உங்களின் நாளை துவங்குவதற்கான சிறந்த உணவாக பழங்களுடன் கலந்த மியுஸ்லி மற்றும் பாலை எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.
ஓட்ஸ்
ஓட்சில் ஆரோக்கியம் மற்றும் சுவை, இரண்டும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளது. இதனால், சாப்பிட்டு நீண்ட நேரத்திற்கு பின்னரும் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். இதன்மூலம் உங்கள் உடல் எடையை பராமரிக்கவும் இது உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கவும், செரிமானத்திற்கும் உதவுவதாகவும், இதன் மூலம் எடையை விரைவாக குறைக்க உதவுவதாகவும் குமார் தெரிவிக்கிறார். இதை இரவு முழுவதும் ஊறவைத்து காலை உணவாகவோ அல்லது மாவாக்கி பிரட்களை தயாரிக்கவோ அல்லது தோசை அல்லது இனிப்புகள் செய்து உட்கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.
கிரீன் டீ
உடலின் தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதற்கு கிரீன் டீ உதவுகிறது. இது கொழுப்பணுக்களை உடைக்கும் சிறந்த வேலையை செய்கிறது. இதில் உள்ள எபிகேலோகேட்டசின் கேலட்டே என்ற பொருள், நோரேபினேபிரைன் என்ற சுரப்பை குறைக்கும் எண்சைம் சுரப்பதில் தடையை ஏற்படுத்துகிறது. இதனால் நோரேபினேபிரைன் அதிகமாக சுரந்து, கொழுப்பு அணுக்களை உடைக்கிறது. கிரீன் டீயில் உள்ள கேபைன் என்ற பொருள், கொழுப்பை எரிப்பதற்கு தூண்டுகிறது. நாம் சுறுசுறுப்புடன் வேலை செய்வதற்கு உதவுகிறது.
தேன்
தேன் உங்கள் தோலுக்கும் மட்டும் நல்லதல்ல. உங்கள் உடலுக்கு இயற்கை சர்க்கரையாவும் பயன்படுகிறது. இதில் எந்த இனிப்பிலும் இல்லாத அளவு வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளது. உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினீர்கள் என்றால், சர்க்கரைக்கு பதிலாக, தேனை பயன்படுத்த துவங்குங்கள். நீங்கள் பயன்படுத்தும் அனைத்து வகை இனிப்பு உணவு வகைகளிலும், பழங்களிலும், பழச்சாறுகளிலும் தேனை பயன்படுத்தி சர்க்கரை இல்லா இனிமையை உணருங்கள்.
தமிழில் : R.பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.