சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார்.
டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார்.
ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அதில் பாரதியின் தோழியாக, டாக்டர் வெண்பாவாக வரும் இவரது கதாபாத்திரம் அவரை தமிழ் தொலைக்காட்சி துறையில் நம்பிக்கைக்குரிய எதிரிகளில் ஒருவராக்கியது.
பாரதிக்கு கண்ணம்மாவுடன் திருமணமானது தெரிந்தும், அவனை அடையும் மோசமான நோக்கத்துடன் பல சதிகளை செய்யும் வில்லியாக சீரியல் முழுக்க வருகிறார். வெண்பாவே பார்த்தாலே ரசிகர்கள் எரிச்சலடைவது உண்டு. அந்தளவுக்கு இவரது நடிப்பு இருக்கும். சீரியலின் பலத்துக்கு வெண்பாவும் ஒரு காரணம் என்று பலரும் ஒப்புக் கொண்டனர். அந்தத் தொடரில் குறையற்ற நடிப்பிற்காக விருதுகளையும் வென்றார்.
29 வயதான ஃபரினா தனது நீண்டகால காதலரான ரஹ்மான் உபைத்தை நவம்பர் 2017 இல் திருமணம் செய்தார். இப்படி சொந்த வாழ்க்கை, சீரியல், மொடலிங், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.
இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை ஃபரினா அறிவித்தார். அப்போது இவர் எடுத்த சில கர்ப்பகால ஃபோட்டோஷூட்கள் வைரலானதுடன் பல விமர்சனங்களையும் பெற்றது. ஆனால் அதை எதையும் கண்டுகொள்ளாமல் ஃபரினா வழக்கம்போல மாடலிங், நடிப்பு என ஓடிக்கொண்டே இருந்தார்.
இந்நிலையில் ஃபரினாவுக்கு நவம்பர் 16ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ அனுபவம் குறித்து ஃபரினா தனது இன்ஸ்டாகிராமில் கூறியது; கர்ப்ப காலம் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது, உடற்பயிற்சி, யோகா செய்தது பிரசவத்திற்கு நன்றாக உதவியது. கர்ப்பம் என்பது வாழ்க்கையின் ஒரு கட்டம், அதனால்,நீங்கள் மாறவேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீங்களாகவே இருந்து அதை எதிர்கொள்ளுங்கள். எவ்வளவு எதிர்மறை மற்றும் மோசமான கருத்துக்கள் இருந்தபோதிலும் நான் அழகான குழந்தையை பிரசவித்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
சீரியலில், கண்ணம்மாவுக்கு பிரசவ வலி வரும்போது, மனசாட்சியே இல்லாமல் அவளை கொல்ல நினைப்பது, அஞ்சலி கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்வது, கருக்கலைப்பு செய்ததாகக் கூறி போலீசாரிடம் சிக்குவது என வெண்பா சீரியல் முழுக்க எதிர்மறை எண்ணங்களுடன் சகலகலா வில்லியாக நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஃபரினா ஒரு ஹீரோ என்பதை நிரூபித்து விட்டார்.
சமீபத்தில் பாக்கியலெட்சுமி சீரியலில், ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்த, ஜெனிஃபர் அந்த சீரியலில் இருந்து விலகினார். அந்த கதாபாத்திரம் இனி நெகட்டிவ்வாக ,மாறபோகிறது. எனவே அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கெட்டப்பெயர் வாங்க விரும்பவில்லை என்று அவர் கூறினார். அவருக்கும் சமீபத்தில் தான் ஆண்குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
ஃபரீனா போன்று தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழிலையும் பிரித்து அதை நேர்த்தியுடன் கையாளும் பெண்கள் மிகவும் குறைவு. அதுவும் ஒரு இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வரும் பெண்ணுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும். அதையெல்லாம் உடைத்தெறிந்து இன்று ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கும் ஃபரினா உண்மையிலே ஒரு சிங்கப்பெண் தான்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“