/indian-express-tamil/media/media_files/2025/10/18/diwali-1-2025-10-18-21-37-37.jpg)
தீபாவளி என்றாலே பட்டாசுகள், இனிப்புகள், புத்தாடைகள் என கொண்டாட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். இதனிடையே பட்டாசு வெடிப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதூகலத்தை கொடுக்கும். பட்டாசு வெடிப்பதால் அன்றைக்கு இல்லத்தில் பூத்துக்குலுங்கும் மகிழ்ச்சி எல்லையே இருக்காது.
ஆனால், ஒவ்வொரு வருடம் பட்டாசுகளால் பலருக்கும் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. இந்த தீக்காயங்கள் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ ஏற்படுகிறது. இந்த தீக்காயங்களை தடுக்கும் படியாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மணம் பயன்படுத்தவும்
பட்டாசுகள், மத்தாப்புகள் உபயோகிக்கும் பொழுது பக்கத்தில் ஒரு பக்கெட்டில் மண் வைத்திருக்க வேண்டும். நாம் உபயோகப்படுத்திவிட்டு தூக்கி போடும் மத்தாப்பு கம்பிகளை இந்த மண்ணில் போட்டால் தீ வேறு எந்த இடமும் பரவாது. அதுமட்டுமல்லாமல், நாம் தெரியாமல் அந்த மத்தாப்பு கம்பிகளை மிதித்து காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மண்ணில் மத்தாப்பு கம்பிகளை போடும் பொழுது நமக்கு எந்தவித தீக்காயங்களும் ஏற்படாமல் தடுக்கலாம்.
தண்ணீர் பயன்படுத்தவும்
இதேபோன்று சங்கு சக்கரம், புஷ்வானம் போன்றவற்றை வெடித்து மகிழ்ந்த பின்னர் பயன்படுத்திய சங்கு சக்கரம், புஷ்வானம் ஆகியவற்றை தண்ணீரில் போட வேண்டும். இதன் மூலம் அவை திடீரென வெடிப்பதை தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், பெரும் விபத்து ஏற்படும் அபாயத்தையும் தடுக்கலாம்.
பாதிக்கப்பட்ட இடத்தை குளுமைப்படுத்தவும்
பட்டாசு வெடிக்கும் பொழுது காயம் ஏற்பட்ட உடனேயே அந்த பகுதியை ஓடும் தண்ணீரில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு காண்பித்து குளிர வைக்க வேண்டும். ஆனால் ஐஸ் வாட்டரை இதற்கு பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு செய்வது எரியும் செயல்முறையை நிறுத்தி, வீக்கத்தை குறைக்கும்.
வீட்டு சிகிச்சைகளை தவிர்க்கவும்
தீக்காயம் மீது டூத் பேஸ்ட், எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தக் கூடாது. இதனால் வெப்பம் அந்த இடத்தில் அடைப்பட்டு, தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். எனவே எப்பொழுதும் தீக்காயங்களுக்காக பரிந்துரை செய்யப்பட்ட ஆன்டி-பாக்டீரியல் அல்லது ஆன்டிசெப்டிக் கிரீம் பயன்படுத்த வேண்டும்.
கண்ணாடிகள் அணியவும்
பட்டாசுகள் வெடிக்கும் பொழுது அதில் இருந்து வரும் அதிகப்படியான புகை நமது கண்களுக்கு எரிச்சல் ஊட்டும் விதமாக இருக்கும். இது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால், பட்டாசு வெடிக்கும் பொழுது கண்ணாடி அணிந்து கொண்டு பட்டாசு வெடிப்பது மிகவும் நல்லது.
பாதுகாப்பான ஆடைகளை அணியவும்
பட்டாசு வெடிக்கும் பொழுது தீயில் படாதவாறு பாதுகாப்பான உடையை அணியவும். நல்ல இறுக்கமான உடைகளை அணிவது பாதுகாப்பாக இருக்கும். லூசான ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்கும் பொழுது அந்த துணி தீயில் பட வாய்ப்புள்ளது. இதனால் விபத்துகளும் ஏற்படலாம். இதனால் இறுக்கமான ஆடைகளை அணிவதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம். மேலே சொன்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பயன்படுத்தி மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடுங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us