/indian-express-tamil/media/media_files/2025/10/18/diwali-kolam-2025-10-18-15-00-15.jpg)
Diwali 2025 Kolam Rangoli
Diwali 2025 Best Kolam Rangoli Designs: இந்தியப் பாரம்பரியத்தின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று, விடியற்காலையில் வீட்டு வாசலில் இடப்படும் வண்ணக் கோலங்கள். பெண்கள் தங்கள் வாசலைச் சுத்தம் செய்து, கோலமிடுவதை வெறும் அன்றாடக் கடமையாக மட்டும் பார்ப்பதில்லை; அவர்களுக்கு அதில் ஒரு நிம்மதியும், திருப்தியும், பெருமிதமும் நிறைந்திருக்கிறது.
ஆனால், இந்தக் கோலங்களுக்குப் பின்னால், பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் ஆழமான அறிவியல் மற்றும் ஆன்மீகக் காரணங்கள் புதைந்துள்ளன.
கோலத்தின் பின் உள்ள அறிவியல் உண்மை
வாசலில் கோலம் போடுவது குறித்து பலருக்கும் ஒரு சந்தேகம் உண்டு: "வெளியில் இருந்து வரும் எதிர்மறை எண்ணங்கள் கோலத்தின் மீது விழுந்து, அதை மிதித்து நாம் வீட்டுக்குள் வந்தால் ஏதேனும் தீங்கு வந்துவிடுமோ?" என்று அஞ்சுகின்றனர்.
ஆனால், இதில் எவ்வித உண்மையுமில்லை. மாறாக, கோலம் போடுவதன் பின்னால் ஒரு நேர்மறையான அறிவியல் உண்மை மறைந்துள்ளது. கோலம் என்பது ஒருவகை நேர்மறை ஆற்றலை (Positive Energy) ஈர்க்கும் வடிவம் (Pattern) ஆகும். காலையில் கோலம் போடுவது, வீட்டில் சுபிட்சத்தையும், அமைதியையும், மனத் திருப்தியையும் அளித்து, நாள் முழுவதற்குமான நல்ல அதிர்வுகளை உறுதி செய்கிறது.
சுபிட்சம் தரும் கோல தரிசனம்
பாரம்பரியமாக, காலையில் எழுந்தவுடன் பசுவைத் தரிசிப்பது அல்லது உள்ளங்கையைப் பார்ப்பது சுபிக்சமாகக் கருதப்படுகிறது. இந்த வரிசையில், பசுவுக்கு நிகராக நாம் போடும் அந்தக் கோலத்தைப் பார்த்தாலே போதும், நம் வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
மேலும், வீட்டின் முன் போடப்பட்ட அழகிய கோலம், வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், வெளியே கடந்து செல்லும் மக்களுக்கும் ஒருவித மன அமைதியை அளித்து, நேர்மறை எண்ணங்களைப் பரவச் செய்கிறது.
கோலம் போடும் விதிமுறைகளும் ரகசியங்களும்
கோலம் என்பது வீட்டுக்குள் வரும் லட்சுமி தேவியை வரவேற்கும் வரவேற்புச் சின்னமாகக் கருதப்படுகிறது. கோலம் போடுவதற்கு அதிகாலை நேரமே மிகவும் சிறந்தது. கோலத்திற்கு வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவது அமைதியைக் குறிக்கும். மேலும், கோலத்தைச் சுற்றிக் காவி நிறம் (சிகப்பு) போடுவது மங்களகரத்தை உறுதி செய்யும். கோலம் போட்ட இடம் எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். இதற்காகத் தண்ணீர் தெளித்து கோலம் போடுவது நல்லது.
அரிசி மாவின் மகத்துவம்: பாவங்கள் நீங்கும் ரகசியம்
இன்று கடைகளில் விற்கும் செயற்கை வண்ணப் பொடிகளைப் பயன்படுத்துவதை விடுத்து, சிலர் பாரம்பரிய அரிசி மாவை மட்டுமே கோலத்திற்குப் பயன்படுத்துவார்கள். இதற்குக் காரணம் ஆன்மீகத்துடன் தொடர்புடையது.
அரிசி மாவினால் கோலம் போடும்போது, அந்த மாவை எறும்புகள், சிறு பூச்சிகள் மற்றும் பறவைகள் உண்ணும். இதன் மூலம், உயிர்களுக்கு உணவளித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கிறது. இவ்வாறு பசி போடுவதால், நம்முடைய பாவங்கள் நீங்குவதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக சாஸ்திரங்கள் நம்புகின்றன.
எனவே, வாசலில் போடும் கோலம் வெறும் அழகிய வடிவம் மட்டுமல்ல; அது நம் பண்பாட்டின் ஒரு பகுதியாகவும், நேர்மறை ஆற்றலைப் பரப்பும் ஒரு குறியீடாகவும், புண்ணியத்தைச் சேர்க்கும் எளிய வழிமுறையாகவும் திகழ்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.