ஒருவரின் ஹார்மோன் அளவு மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருந்தால் அல்லது அவரது உடல் ஹார்மோன்களுக்கு சரியாக பதிலளிக்கத் தவறினால் அவருக்கு நாளமில்லாச் சுரப்பிக் கோளாறு இருப்பது கண்டறியப்படலாம். இது ஆங்கிலத்தில் endocrine disorders என்று அழைக்கப்படுகிறது.
நீரிழிவு முதல் தைராய்டு வரை பல எண்டோகிரைன் கோளாறுகள் உள்ளன, அவை உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கலாம், மேலும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்.
எண்டோகிரைன் கோளாறு வர காரணங்கள்
ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு காரணமான நாளமில்லா அமைப்பு சரியாக செயல்படாதபோது எண்டோகிரைன் கோளாறுகள் ஏற்படுகின்றன. ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவர் இந்த கோளாறுகளால் பாதிக்கப்படலாம்.
இந்த நிலைமைகள் ஹார்மோன்களைப் பாதிப்பதால், அவை பலவிதமான அறிகுறிகளை ஏற்படுத்துவதோடு, வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், பாலியல் செயல்பாடு மற்றும் ஒருவரின் மனநிலையை பாதிக்கலாம் என்று அப்பல்லோ டயக்னாஸ்டிக்ஸின் ஆலோசகர் நோயியல் நிபுணர் டாக்டர் நிரஞ்சன் நாயக் கூறினார்.
பொதுவான எண்டோகிரைன் கோளாறுகளில் சில:
நீரிழிவு என்பது இரத்தத்தில் குளுக்கோஸின் உயர் அளவை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். இதில் உடலால், குளுக்கோஸைக் கட்டுப்படுத்த போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
நீரிழிவு நோயாளிகள் தாகம் மற்றும் சிறுநீர் கழித்தல், அதிகரித்த பசி, எதிர்பாராத எடை மாற்றங்கள், தொடர்ந்து புண்கள், கைகள் அல்லது கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, சோர்வு மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளைக் காட்டலாம்.
இரண்டு வகையான தைராய்டு, பெரும்பான்மையான மக்களிடமும் காணப்படுகிறது. ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி அதிக அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதாகும். தைராய்டு சுரப்பியின் வீக்கம் அல்லது கிரேவ்ஸ் நோய் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, தூங்குவதில் சிரமம், எரிச்சல், சோர்வு, குடல் பிரச்னைகள் மற்றும் அதிகரித்த பசியுடன் எடை இழப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
தைராய்டு போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாதபோது ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது. எடை அதிகரிப்பு, சோர்வு, மெதுவான பேச்சு, வறண்ட சருமம், தசைப்பிடிப்பு, குழப்பம், மலச்சிக்கல் மற்றும் கைகளில் கூச்சம் போன்ற அறிகுறிகளை ஒருவர் வெளிப்படுத்துவார். இந்த நாளமில்லா பிரச்சனைகளுக்கு உடனடி கவனம் தேவை.
நோய் கண்டறிதல்
நோயறிதலுக்கு, பொதுவாக சிறுநீர் பரிசோதனை, எம்ஆர்ஐ, மரபணு சோதனைகள், ஹார்மோன் சோதனைகள் மற்றும் அவருக்கு உள்ள பிரச்சனைகளின் வகையின் அடிப்படையில் இரத்த பரிசோதனைகள் செய்யப்படும். மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் எந்த சோதனைகளையும் அல்லது ஸ்கேன்களையும் தவிர்க்க வேண்டாம். அவ்வாறு செய்வது, சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சையில் தாமதத்திற்கு வழிவகுக்கும்.
சிகிச்சை
இது நபருக்கு நபர் மாறுபடலாம். உங்களுக்குத் தேவையான மருந்து அல்லது சிகிச்சையை மருத்துவர் தீர்மானிப்பார். மேலும், சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் உகந்த எடையை பராமரித்தல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சீரான வாழ்க்கை முறையை கடைபிடிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.