முடி உதிர்தல் என்பது இன்றைய சூழலில் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை ஆகும். இதனால் இள்ம் வயதிலேயே நிறைய பேர் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முடி வளர நிறைய மருந்துகள் மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருந்தாலும் எந்த மாற்றமும் இல்லை என நிறைய பேர் புலம்புகின்றனர்.
ஊட்டச்சத்து குறைபாடு, பராமரிப்பு இல்லாமை, பரம்பரை பிரச்சனை,ஹார்மோன்ஸ் குறைபாடு போன்ற காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது என்று டாக்டர் சந்தியா கூறுகிறார். டாக்டர் சந்தியா இளங்கலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படித்துவிட்டு தற்போது பட்டப்படிப்பாக அக்யூபன்சர் அண்ட் எனர்ஜி சைன்ஸ் படித்து வருகிறார். மேலும் இவர் சென்னை அண்ணா மருத்துவமனையிலும் இண்டர்ன்ஷிப் செய்து வருகிறார்.
முடி உதிர்தல் மற்றும் அதற்கான எளிய தீர்வு குறித்து மருத்துவர் சந்தியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, "வெந்தயத் தண்ணீர் முடி வளர்ச்சிக்கு உதவும். வெந்தயத்தில் அதிகளவு புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளது. இவை முடி வளர்ச்சியைத் தூண்டுவதோடு, முடி வேர்களை வலுப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் முடி உதிர்தல் குறைந்து, அடர்த்தியாக வளர உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கு உதவும் வெந்தயத்தின் பயன்கள்:
1. வெந்தயத்தில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பொடுகை கட்டுப்படுத்த உதவுகின்றன.
2. வெந்தயத்தில் உள்ள சில கூறுகள் முடியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகின்றன.
3. வெந்தயம் முடியை வலுப்படுத்துவதால், முடி உடைவது குறைந்து ஆரோக்கியமாக வளர்கிறது. வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் மயிர்க்கால்களைத் தூண்டி புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.
வெந்தயத் தண்ணீரை எப்படி பயன்படுத்துவது?
1. இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இதனை அதிகமாக ஊறவைத்து பிரிட்ஜியில் வைத்தும் அவ்வப்போது பயன்படுத்தலாம்.
2. காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
3. ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்திய பிறகு, இந்த வெந்தயத் தண்ணீரை ஸ்கால்ப்பில் படும்படி தெளித்து லேசாக மசாஜ் செய்யவும்.
4. அதை அப்படியே விட்டு விடலாம் அல்லது 20-30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசலாம். எண்ணெய் தலையில் கூட இதை தேய்க்கலாம்.
5. வாரத்திற்கு 2-3 முறை இந்த வெந்தயத் தண்ணீரைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். தினமும் பயன்படுத்தினாலும் எந்த பிரச்சனையும் வராது.
6. ஊறிப்போன வெந்தயத்தை அரைத்து ஹேர் பேக்காக பயன்படுத்தலாம்.
சிலருக்கு வெந்தயம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, முதல் முறை பயன்படுத்தும் முன், சிறிதளவு எடுத்து உங்கள் கையின் பின்புறத்தில் தடவி பரிசோதித்துவிட்டு பயன்படுத்தவும். ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்" என்றார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.