/tamil-ie/media/media_files/uploads/2017/07/a725.jpg)
நாளை என்ன நடக்கும் என்பதே நிச்சயம் இல்லாத வாழ்க்கை நம் வாழ்க்கை. இந்த வாழ்க்கைக்கு மத்தியில் 'என்றாவது ஒருநாள் ஜெயித்துவிட மாட்டோமா? என்று தினம் தினம் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். நமது ஆயுள் என்னவோ 50 ஆண்டோ, 60 ஆண்டோ தான். ஆனால், பூமியின் ஆயுள்? இன்னும் நூறு கோடி ஆண்டுகளுக்குப் பின் பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், உயிர்கள் எப்படி மாறும்? என்பதை எல்லாம் ஒரு விஞ்ஞானிகள் குழு கணித்துள்ளது. முக்கியமாக, நமது சூரிய மண்டலத்தில் உள்ள செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களை, நிலவுகளை மனிதர்கள் கைப்பற்றி இருப்பார்களா? என்பது குறித்தும் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த கணிப்பில், மனித குலத்துக்கான நன்மைகளும் இருக்கின்றன, தீமைகளும் இருக்கின்றன. முதலாவதாக, வருகிற கி.பி. பத்தாயிரமாவது ஆண்டில், 2000-ல் ஏற்பட்ட Y2K கம்ப்யூட்டர் பிரச்சனை, Y10K என்ற புதிய வடிவத்தில் தோன்றி உலக கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.
கி.பி. 50 ஆயிரமாவது ஆண்டில் பூமியில் மற்றுமொரு பனிக்காலம் தோன்றி 'நயாகரா' போன்ற பல நீர்வீழ்ச்சிகள் அழியும், பனிமலைகள் கரைந்து பனிக்கட்டி ஆறாகிவிடும். கி.பி. ஒரு லட்சமாவது ஆண்டில், ‘டெர்ரா பார்மிங்’ (ஒரு புதிய கிரகத்தை மனிதன் வாழத் தகுந்த இடமாக மாற்றுவது) மூலம் செவ்வாய் கிரகம் மனித வாழ்க்கைக்கு ஏற்றதாக மாற்றப்படுமாம். அங்கு மனிதனும் குடியேறத் தொடங்கிவிடுவான்.
கி.பி. 2½ லட்சம் ஆண்டில், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி கீழே உள்ள ஹவாயின் ‘லோஇஹி’ எனும் 5,800 கி.மீ. நீளம் கொண்ட எரிமலையானது வெடித்துச் சிதறி ஒரு புதிய தீவு உருவாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
கி.பி. 5 லட்சம் ஆண்டில், சுமார் ஒரு கி.மீ நீளம் கொண்ட சிறுகோள் ஒன்று பூமியுடன் மோதி அழிவை ஏற்படுத்துமாம்.
கி.பி. 10 லட்சம் ஆண்டில், பூமியில் ஒரு சூப்பர் எரிமலை வெடித்து சுமார் 3,200 கி.மீ பரப்பளவை மூடும் அளவு சாம்பல் வெளியேறுமாம். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபோவார்கள். மேலும், ஓரியான் நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள சிவப்பு நட்சத்திரம் பீட்-கியூஸ் (Bete-lgeuse) ஒரு சூப்பர் நோவாவாக வெடித்துச்சிதறும்.
கி.பி. 20 லட்சம் ஆண்டில், மனித இனம் பல்வேறு கிரகங்களில் குடியேறி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் போகும். இதனால், பல புதிய மனித இனங்களும் அப்போது தோன்றிவிடுமாம்.
கி.பி. 50 லட்சம் ஆண்டில், போபோஸ் (Phobos) எனப்படும் செவ்வாய் கிரகத்தின் நிலவுகளுள் ஒன்று, செவ்வாய் கிரகத்துடன் மோதி வெடித்துச் சிதறும். கீழே பூமியில், ஆப்பிரிக்காவில் ஒரு பெரும்பகுதி உடைந்து மத்திய தரை கடலை முழுவதுமாக மூடும். அதன் விளைவாக இமயமலைக்கு நிகரான ஒரு மலை ஒன்று உருவாகி எவரெஸ்ட் சிகரத்தைவிட பெரிய சிகரம் ஒன்று தோன்றும்.
கி.பி. 250 லட்சம் ஆண்டில், உலக கண்டங்கள் அனைத்தும் ஒன்றாகி ‘பேன்ஜியா அல்டிமா’ (Pangea Ultima) எனப்படும் ஒரு சூப்பர் கண்டம் உருவாகும்.
கி.பி. 500 லட்சம் ஆண்டில், பூமியில் இருந்து சுமார் 6500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு பெரு வெடிப்பு ஏற்பட்டு, அதனால் பூமியில் ஓசோன் படலம் அழிந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அழிந்து போவார்களாம்.
கி.பி. 800 லட்சம் ஆண்டில், பூமியின் பிராண வாயு, ஓசோன் மற்றும் கரியமில வாயு முற்றிலும் குறைந்து ஒளிச்சேர்க்கை நிகழாமல் மொத்த தாவர-விலங்கினங்கள் அனைத்தும் அழிந்துவிடும். இறுதியாக, கி.பி. ஆயிரம் லட்சம் ஆண்டில் சூரியனின் வெப்பம் 10 சதவீதம் அதிகரித்து பூமியின் தண்ணீர் மொத்தமும் காணாமல் போகுமாம்.
இந்த கணிப்பில் குறிப்பிடப்படும் பல தகவல்கள் அனைத்தும் உண்மையா என்பதை நிரூபிக்க அல்லது உறுதியாகச் சொல்ல எந்தவொரு தியரியும் இல்லை. இருப்பினும், இதுவரையிலான உலக வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையில் நோக்கினால் இந்த கணிப்பில் கூறப்பட்டுள்ள பல நிகழ்வுகள் சாத்தியமே என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.