/indian-express-tamil/media/media_files/2025/05/31/s1I8czmKypFudg3TorK4.jpg)
தோட்டத்தின் ராணி என்று அழைக்கப்படும் ரோஜா பூ, பார்ப்பதற்குக் கண்களுக்கு விருந்தளிக்கும். ஆனால், ரோஜா செடிகள் சரியாகப் பூக்காமல், இலைகள் மட்டும் அடர்த்தியாக வளரும்போது நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். செழிப்பான பூக்களைக் காண, நாம் ரசாயன உரங்களை நாடத் தேவையில்லை. ரோஜா பூக்களை கணக்கில்லாமல் பூக்க வைக்க நாம் பின்பற்ற வேண்டிய ஒரு டிப்ஸ் பற்றி பசுமை கார்டனிங் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
ரோஜா செடியை வளர்ப்பது என்பது ஒரு கலை. உங்கள் வீட்டில் ரோஜாக்கள் கொத்துக் கொத்தாக, கணக்கில்லாமல் பூத்து குலுங்க வேண்டும் என்றால், அதற்கு உரங்களை அள்ளிப் போடுவதை விட, ஒரு முக்கியமான வேலையைச் செய்ய வேண்டும். அதுதான் "கத்தரித்தல்" (Pruning). ஆம், வெறும் கத்தரியை (அல்லது கவாத்து செய்யும் கருவியை) வைத்து இந்த ஒரு விஷயத்தை மட்டும் தவறாமல் செய்து பாருங்கள்; உங்கள் ரோஜா செடி அபாரமாகப் பூப்பதை நீங்களே பார்க்கலாம்.
ரகசியம் 1: வாடிய பூக்களை நீக்குதல்
செடியில் ஒரு பூ பூத்து, அது வாடிவிட்ட பின், அதன் மகரந்தச் சேர்க்கை செயல்பாடு முடிந்துவிடும். அந்தப் பூவை செடியிலேயே வைத்திருந்தால், அதன் சக்தி விதைகளை உருவாக்குவதிலேயே செலவழிக்கப்படும். இதனால், செடி அடுத்த பூக்களைத் தர தாமதமாகும். இதைத் தடுக்க, வாடிய பூக்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பூ வாடியவுடன், பூவின் தண்டோடு சேர்த்து, கீழே இருக்கும் இரண்டு இலைகளையும் சேர்த்து கத்தரியால் வெட்டி விட வேண்டும்.
செடியின் புதிய துளிர்கள் பொதுவாக ஐந்து இலைகள் கொண்ட கிளைகளில் இருந்துதான் வரும். எனவே, இரண்டு இலைகளைச் சேர்த்து வெட்டுவது, அந்த இடத்தில் இருந்து புதிய கிளைகள் வலுவாக வந்து, அதில் அதிகப் பூக்கள் பூக்கத் தூண்டும். இதுவே ரோஜா செடியில் தொடர்ந்து பூக்கள் பூப்பதற்கான இரகசிய 'வித்தை' ஆகும்.
ரகசியம் 2: சரியான கவாத்து (Pruning)
ரோஜா செடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர கவாத்து மிகவும் அவசியம். செடியின் மையப் பகுதியில் காற்றோட்டம் இருக்கவும், நோய்வாய்ப்பட்ட கிளைகளை அகற்றவும் கத்தரித்தல் அவசியம். காய்ந்த கிளைகள், நோய் தாக்கிய கிளைகள், ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் மெல்லிய கிளைகள் அனைத்தையும் கத்தரியால் நீக்கிவிட வேண்டும். இந்த கவாத்து (கத்தரித்தல்) செய்வதால், செடியின் அடிப்பகுதி தடிமனாகி, மேல் பகுதி நீளமாக வளராமல் அடர்த்தியாக வளரும். அடர்த்தியான செடியில் தான் பூக்களின் எண்ணிக்கையும் கூடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.