எலுமிச்சையில் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. இதில், அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி உள்ளது. கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில், எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை.
இப்படி பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த எலுமிச்சை பழத்தை நீண்ட நாட்கள் கெடாமல் எப்படி சேமித்து வைப்பது?
பச்சை கலந்த மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் எலுமிச்சை பழங்களை பார்த்து வாங்கவும். முழுவதும் மஞ்சளுடன் இருக்கும் பழங்களை வாங்குவதை தவிர்க்கவும். ஏனெனில் அவை கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதாக இருக்கலாம்.
எலுமிச்சை பழத்தை ஃபிரிட்ஜில் வைக்கும்போது அது சில நாட்களில் காய்ந்துவிடும். ஆனால் அதை சரியாக சேமித்து வைத்தால், 15 நாட்கள் வரை, கெடாமல் புதிதாக இருக்கும்.
எலுமிச்சை பழங்களை கடையில் இருந்து வாங்கியதும், ஒரு மெல்லிய காட்டன் துணியால் நன்றாக துடைக்கவும்.
பிறகு ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில், டிஷ்யூ பேப்பர் அல்லது செய்தித்தாளை விரித்து அதன் மீது எலுமிச்சை பழங்களை அடுக்கி வைத்து, அப்படியே ஃபிரிட்ஜில் வைக்கவும். இப்படி வைத்தால், எலுமிச்சை குறைந்தது 10 நாட்கள் வரை கெடாமல் புதிது போல இருக்கும்.
ஆனால் நீங்கள் பிளாஸ்டிக் கன்டெய்னரில் வைத்தால், எலுமிச்சை சீக்கிரமே காய்ந்து, அழுகி போய்விடும்.
எலுமிச்சை பழங்களை ஒவ்வொன்றாக துடைத்த பின், தனித்தனியாக டிஷ்யூ பேப்பர் கொண்டு பொட்டலம் செய்து, எல்லாவற்றையும் ஒரு பாலித்தீன் பையில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கலாம். தேவைப்படும் போது, ஒவ்வொன்றாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி வைக்கும் பொழுது அவை 10 நாட்கள் வரை அப்படியே இருக்கும்.
எலுமிச்சை பழத்தின் சாற்றை பிரித்தெடுத்து, காற்றுப் புகாத ஜாடியில் சேமித்து, ஃபிரீசரில் வைக்கலாம். இது பல மாதங்கள் வரையிலும் கெடாமல் இருக்கும். தேவைப்படும் போது அதை எடுத்து, பயன்படுத்திக் கொள்ளலாம்.
எலுமிச்சை மருத்துவ குறிப்புகள்
எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் தீரும்.
காலையில் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.