வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், மானிய விலையில் ‘கிட்’ வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மாடித்தோட்டம் அமைப்பதற்குத் தேவையான கிட் மட்டுமல்லாது சொட்டு நீர் குழாய் அமைப்புகளையும் அரசு' மானிய விலையில் வழங்குகிறது.
உங்கள் அருகில் உள்ள மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், ஆதார் அட்டை நகலை அளித்து விதைகள், இயற்கை உரம் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட பையை பெற முடியும். அத்துடன் விற்பனையகங்களை தேடி வரும் மக்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் அதைப் பராமரித்தல் குறித்த விளக்கமும் அளிக்கப்படுகிறது.
தற்போது இந்த தொகுப்புகள் அனைத்து மக்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில், இணையதளம் வழியாகப் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னைவாசிகள் பயன்பெறும் வகையில், சென்னை காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாடித்தோட்டத்துக்கு இலவசமாகப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் பேராசிரியை நிஷா கூறுகையில், மாடித்தோட்டம் மூலம், நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே ஓரளவுக்கு நிவர்த்தி செய்ய முடியும். அடுக்குமாடி குடியிருப்பு, வீட்டிலுள்ள பால்கனியிலும் சுலபமாக மாடித்தோட்டம் அமைக்கலாம். அதற்கான வழிகாட்டல்களையும் நாங்கள் வழங்குகிறோம் என்றார்.
மேலும் இதுகுறித்து இணை பேராசிரியை, விமலாராணி பேசுகையில்; மாடித்தோட்டம் அமைப்பதற்கு 100 சதுர அடி இருந்தால்கூட போதும். ஒருவேளை இடவசதி குறைவாக இருந்தால், செங்குத்தான தோட்டங்களையும் அமைக்கலாம்.
முக்கியமாக மாடியில் மழைநீர் வடியும் பகுதிக்கு எதிர்பக்கத்தில் தான் தோட்டம் அமைக்க வேண்டும். வெயிலோ, மழையோ செடிகளைப் பாதிக்காமல் இருக்க மாடியில் நிழல் செட் போடலாம். மாடியில், திறந்தவெளி தோட்டம், நிழல் செட் தோட்டம், இரண்டும் சேர்ந்த தோட்டம் என மூன்று வகையாக தோட்டம் அமைக்கலாம்.
பருவ நிலைக்கு ஏற்றமாதிரி செடிகளை வளர்க்கலாம். இடவசதி அதிகமுள்ளவர்கள் முருங்கை, அகத்தி, வாழை, பப்பாளி போன்ற போன்ற சில மரவகைகளை வளர்க்கலாம்.
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில், மாடித்தோட்டம் அமைப்பதற்கான இலவச ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள், மாடித்தோட்டத்துக்குத் தேவையான இயற்கை உரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “