காரைக்காலில் உள்ள திருநள்ளாறு நள நாராயணபொருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவில் கொடிமறம் ஏற்றத்தின்போது கொடிமரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மேற்சவ விழாவுக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்துக்கு அருகில் எழுந்தருளியதும், பூஜைகள் செய்யப்பட்டு, கொடி ஏற்றம் நிகழ்த்தப்பட்டபோது, திடீரென எதிர்பாராத விதமாக கொடிமரம் முறிந்து விழுந்தது. இதனால் சிவாச்சாரியார்களும், பக்தர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் கோயில் நிர்வாகம் கொடி மரத்தை சரியாக பராமரிக்காத காரணத்தால்தான் இந்நிகழ்வு நடந்துள்ளது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து தோஷ நிவர்த்தி ஹோமம் நடத்தப்பட்டு, ஏற்கனவே கொடிமரம் உள்ள இடத்தின் அருகில் தற்காலிகமாக புதிதாகக் கொடி மரம் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் செய்து மகா தீபாராதனைக் காட்டப்பட்டன. இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீன கட்டளை கந்தசாமி தம்புரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“