தமிழ் திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சாகுல். எம்.ஜி.ஆர்., சிவாஜி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் போன்ற பல நடிகர்களுக்கு சண்டைக் காட்சிகளில் டூப் ஆக நடித்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் படத்தில் சாகுல் டூப் ஆக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், எம்.ஜி.ஆரின் பட்டிக்காட்டு பொன்னையா படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதிலிருந்து எம்.ஜி.ஆரின் அனைத்து படங்களிலும் சாகுல் தான் டூப் ஆக நடித்துள்ளார்.
அவருக்கு நிறைய உதவிகளையும் எம்.ஜி.ஆர். செய்துள்ளார்.
திரையுலகில் பல சாதனைகளை புரிந்த சாகுல், ஒருமுறை ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மற்றும் பிற நடிகர்களுடன் நடித்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
”எம்.ஜி.ஆர். போல ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது. அவர் எனக்கு இரண்டாவது தாய் மாதிரி. படங்களில் ரிஸ்க் ஆன காட்சிகளை எடுக்க அவர் அனுமதிக்க மாட்டார். அதனால் அவர் இல்லாத சமயங்களில் தான் ரிஸ்க் காட்சிகளில் நடிப்போம்.
ஒருவேளை அந்த காட்சிகளை பார்த்துவிட்டால் எங்களை திட்டுவார்.
அதேபோல ஒருநாள் ஸ்ரீதர் இயக்கத்தில் மீனவ நண்பன் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு காட்சியில் 15 அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்க வேண்டும். கீழே பெட் உள்பட எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. இந்த காட்சியில் சாகுல் டூப் போட இருந்தது. அவர் ஷாட்டுக்கு தயாராக இருக்கும்போது, அங்கு வந்த எம்.ஜி.ஆர். இயக்குநருக்கு தெரியாமல் சாகுலை பின்னே தள்ளிவிட்டு அவர் உயரத்தில் இருந்து குதித்துள்ளார்.
இயக்குநர் ஸ்ரீதர், சாகுல் அருமையாக குதித்து விட்டார் என சூப்பர் என கைத்தட்டி பாராட்டியுள்ளார். பிறகு தான் குதித்தது எம்.ஜி.ஆர். என தெரியவந்தது. அதேபோல நிறைய சண்டைக் காட்சிகளில் தானாகவே ரிஸ்க் எடுத்து எம்.ஜி.ஆர். நடிப்பார்.
அடிமைப்பெண் படத்தின் போது எம்.ஜி.ஆர். ஒரு சிங்கத்துடன் சண்டை போடும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அதற்காக சொந்தமாக சிங்கத்தை வாங்கி, அதற்கு உணவளித்து பராமரித்து பழக்கினார்.
என்னதான் டெக்னீக்கல் மூலம் சிங்கத்துடன் சண்டை போடுவது மாதிரி காண்பித்தாலும், உண்மையிலே சிங்கத்தை கட்டிப்போட்டு அதனருகில் சென்று சண்டை போடுவது மாதிரி பாவனைகள் செய்து அவர் நடித்தார். எம்.ஜி.ஆர். எப்போதும் ஆட்கள் இல்லாமல் சாப்பிடமாட்டார். அனைவரிடமும் அரட்டை அடித்து சிரித்து சாப்பிடுவது தான் வழக்கம்.
அதனாலேயே ஷூட்டிங்கின் போது எம்.ஜி.ஆர். வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 100 பேருக்கு சாப்பாடு வரும்.
அவர் அரசியலுக்குள் நுழையும் வரை நாங்கள்தான் அவருக்கு பாதுகாப்பளராக இருந்தோம். ஆனால் பிறகு நாங்களே அவரிடமிருந்து வந்துவிட்டோம், என்று சாகுல் அந்த வீடியோவில் பேசினார்.
இதேபோல ரஜினி, கமல் மற்றும் பிற நடிகர்களுடன் நடித்த அனுபவங்களையும் ஃபைட் மாஸ்டர் சாகுல் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.