கொசுக்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவை கடித்தால் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உண்மையில், புள்ளி விவரங்களின்படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம்.
கொசுக்கள் வெஸ்ட் நைல் காய்ச்சல், ஜிகா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா, செயின்ட் லூயிஸ் மூளை அழற்சி போன்ற பல்வேறு நோய்களைப் பரப்பக்கூடியவை. டெங்கு கொசு பட்டப்பகலில் நாம் விழித்திருக்கும்போதே கடிக்கும்.
இந்தக் கொசுக்களிடமிருந்து தப்பிக்க வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். குட்டைகள், தொட்டிகளின் கீழேயிருக்கும் வாளிகள், டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் தண்ணீரைத் தேங்க விடக் கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட இடங்கள்தான் கொசுக்களுக்கு விருப்பமானவை.
இப்போது கெமிக்கல் கொசு வர்த்திகள் கடைகளில் கிடைக்கின்றன. அதன் வாசனை சிலருக்கு பிடிக்காது. ஆனால், இதற்கு ஒரு இயற்கை தீர்வு உள்ளது. வெங்காயம், கடுகு எண்ணெய், சாம்பிராணி மட்டும் கொண்டு நீங்களே வீட்டில் ரசாயனமில்லாத இயற்கையான கொசு விரட்டி தயாரிக்கலாம்.
எப்படி செய்வது?
முதலில், ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன்கடுகு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். இதில் ஒரு ஸ்பூன் கெட்டி சாம்பிராணி பொடியை கலக்கவும். இரண்டு நிமிடம் சூடானதும் அடுப்பை அணைக்கவும். இப்போது ஒரு வெங்காயத்தை எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டி சிறிய உரலில் போட்டு இடித்து கரடுமுரடாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதில் ஏற்கெனவே காய்ச்சிய கடுகு எண்ணெய்யை ஊற்றி நன்கு கலந்து ஜன்னல் ஓரம், வீடு வாசல், வீட்டுக்குள் கொசு நுழையும் இடங்களில் வைக்கவும். இப்படி செய்தால் கொசு உங்கள் வீட்டுக்குள் வராது.
உங்கள் வீட்டில் கொசு வராமல் தடுக்க கண்டிப்பா இந்த இயற்கை வழியை முயற்சி பண்ணுங்க..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.