மும்பையில் பிறந்த குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்த விநோத சம்பவத்தால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தில் உள்ள தானே பகுதியிலுள்ள மும்ப்ரா எனும் பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், பிரசவத்திற்காக அங்குள்ள பிலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜூலை 20-ஆம் தேதி அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஏனெனில், பிறந்த குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை வளர்ந்திருப்பது தெரியவந்தது.
இதனால், வயிற்றினுள் இருக்கும் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும், இல்லையெனில் பிறந்த குழந்தைக்கு ஆபத்து என்பதால், உடனடியாக அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, அக்குழந்தைக்கு கடந்த 24-ஆம் தேதி தானேயில் உள்ள டைட்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக குழந்தையின் வயிற்றில் உள்ள சிசு அகற்றப்பட்டது. தற்போது , குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அகற்றப்பட்ட குழந்தை 7 செண்டி மீட்டர் நீளமும், எலும்புகள், தலை, மூளை ஆகியவை வளர்ச்சியடைந்த நிலையிலும் உள்ளது என தெரிவித்த மருத்துவர்கள், அக்குழந்தைகள் மண்டை ஓடு இல்லை என கூறினர். மேலும், அக்குழந்தை ஆண் குழந்தை எனவும், 150 கிராம் எடை கொண்டது எனவும், அதுதொடர்பாக சோதனை மேற்கொள்ள வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இரட்டைக் குழந்தைகளாக பிறக்க வேண்டியவர்கள் குறைபாட்டின் காரணமாக, ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை சார்ந்து வளரும் இந்த குறைபாடு மிகவும் அரிதானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.