/indian-express-tamil/media/media_files/2025/10/17/elephant-2025-10-17-10-20-32.jpg)
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி அமைந்து உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, குடிநீர் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 'ரோலக்ஸ்' என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது, மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும், யானை அங்கு இருந்து தப்பி வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக நாள்தோறும் இரவு, பகலாக யானையை கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இதை அடுத்து ரோலக்ஸை கண்காணித்து பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ் லிப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட கபில்தேவ், நரசிம்மன் மற்றும் முத்து ஆகிய மூன்று யானைகள் கண்காணித்து வந்தன. அதில் நரசிம்மன், முத்து ஆகிய இரண்டு யானைகளுக்கும் மதம் பிடித்ததால் கடந்த 10-ம் தேதி டாப்ஸ்லிப்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதற்கு பதிலாக அங்கிருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை தற்பொழுது கம்பன் ஊருக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக ரோலக்ஸ் என்று அழைக்கப்படும் காட்டு யானையை பிடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வனத் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ஊருக்குள் நுழைந்து அட்டகாசம்... ரோலக்ஸ் யானை பிடிபட்டது#coimbator#rolexelephantpic.twitter.com/nqWr0IMCg3
— Indian Express Tamil (@IeTamil) October 17, 2025
இந்நிலையில் இன்று கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிபட்டது. அதிகாலை 4 மணி அளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையில், மருத்துவர்கள் ராஜேஷ் , வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதை அடுத்து கபில்தேவ், வாசிம், பொம்மன், சின்னத்தம்பி ஆகிய 4 யானைகளுடன் வனத் துறையினர் ரோலக்ஸ் காட்டு யானையை கட்டுப்படுத்தி வாகனத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.