தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரகுவரன். 1982ல் வெளிவந்த ’ஏழாவது மனிதன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
குணச்சித்திரம், வில்லன் என பலவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி ஒரு இடத்தைப் பிடித்தவர். தமிம் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பிற மொழிகளிலும் நடித்துள்ளார். 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி ரகுவரன் மறைந்தார்.
ரகுவரன், நடிகை ரோகிணியைக் காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2004ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றார்கள். இந்த தம்பதிக்கு ரிஷி என்ற ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடந்த ’நாயகனுக்கு நன்றி விழா’ எனும் நிகழ்வில் ரோகினி கலந்து கொண்டு ரகுவரன் குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

அதில் ரோகினி பேசுகையில், ரகுவரன் வாழ்க்கைக்கு உள்ள நான் ஒரு ரசிகையா தான் போனேன், கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என்னை பார்த்து நிறைய பேரு பொறாமைப்பட்டாங்க. நிறைய பெண்களோட கண்கள்ல அந்த பொறாமைய நான் பார்க்க முடிஞ்சது.
கொஞ்ச காலம்தான் நாங்க ஒன்னா இருந்தோம். அவரை நானே இன்னும் முழுசா புரிஞ்சுக்கலன்னு நினைக்கிறேன். ஆனா நான் இருந்த நிலைமை வேற. அவர் நிஜ வாழ்க்கையில இருந்துதான் எல்லாத்தையும் எடுப்பாரு.
பார்த்தேன் ரசித்தேன் படத்துல நடிக்கும் போது எனக்கு ஸ்டெப் சிஸ்டர் இருக்கா. அந்த விஷயத்தை எப்படி ஹெண்டில் பண்றதுன்னு என்கிட்ட சொல்லுவாரு. துள்ளி திரிந்த காலம் படம் ஊட்டியில நடக்கிற கதை. ஆனா அவரு அந்த கேரெக்டருக்காக சென்னையில வேகாத வெயில்ல ஸ்வெட்டர் போட்டு நடப்பாரு.
ரகு வாழ்ந்தது கொஞ்ச காலம்தான். 100 வயசு வரை இருந்து வாழுற வாழ்க்கைய விட அவரு இந்த கொஞ்ச காலத்துல அதிகம் வாழ்ந்துட்டாரு. அவரு ரொம்ப கம்மியா தூங்குவாரு. தூங்காத நேரத்துல அவரோட மூளை வேலை செய்ஞ்சுட்டே இருக்கும்.
வெளியே நிறைய பேசமாட்டாரு, அமைதியா இருப்பாரு. ஆனா வீட்டுல நிறைய பேசுவாரு.
கல்யாணம் ஆன புதுசுல ஒருநாள் அபிமன்யு படம் ஷூட்டிங் பண்ணிட்டு ரூம்க்கு வரவே இல்லை, நான் என்ன ஆச்சுன்னு கேட்கும் போது பேசுற பேச்சு எல்லாம் வேற மாதிரி இருந்தது.
அப்போதான் அவுங்க அம்மா, நீ பயப்படாத, இப்போ என்ன கேரெக்டர் பண்ணிட்டு இருப்பானோ அந்த மாதிரி அவர் நடந்துக்குவான் சொன்னாங்க. அபிமன்யு படம் பாக்கும் போதுதான் இதையும், அதையும் என்னால கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது.
ரகு அம்மாவுக்கு அஞ்சலி படம் ரொம்ப பிடிக்கும், ஏன்னா அந்த படம் நடிக்கும் போது ரொம்ப ஜாலியா, அமைதியா இருந்தாராம். அதேமாதிரி எனக்கு லவ் டுடே படம் ரொம்ப சிறந்த நேரமா இருந்தது.
அவர் ஒரு கலைஞர். அந்த கலைக்கு தன்னால முடிஞ்ச எல்லாத்தையும் கொடுத்ததுனால தான் இப்போ நம்மக்கூட இல்ல. இப்போ அவர் நம்மக்கூட இல்லனாலும் இன்னும் எத்தனையோ வருஷத்துக்கு அவரை நினைவு வச்சுக்கூடிய இடத்துக்கு அவரு போனாரு. அதுக்கும் கலைதான் காரணம்.
அவருக்கு கல்யாணம் நடக்குமா, இல்லையானு அவங்க வீட்டுல நினைக்கும் போதுதான் எங்க கல்யாணம் நடந்து, ஒரு அழகான ஆரோக்கியமான குழந்தையையும் நான் கொடுத்தேன். முதன்முதல்ல கண்ணுல கண்ணீரோட என்கிட்ட வந்து குழந்தைய காண்பிச்சாரு.
ரகுவை அவ்ளோ சந்தோஷமா நான் எப்பவுமே பார்த்தது இல்ல. ரிஷி வந்த அந்த நாள்தான் ரகுவோட சந்தோஷமான நாள். அந்த சந்தோஷத்தை அவருக்கு கொடுக்க முடிஞ்சது அப்படிங்கிறதுதான் என்னோட சந்தோஷம்.
சாவித்திரி அம்மாவுக்கு நம்மளை மாதிரி பக்கத்துல யாராவது இருந்துருக்கணுமோ சில நேரங்கள்ல நான் நினைச்சு இருக்கேன், அதே ஒரு உணர்வோட தான் நான் ரகுவை கல்யாணம் பண்ணேன். ஏதோ ஒரு விதத்துல அவரோட பராம்பரியத்தை, அவரோட சந்ததியை தொடர்றதுக்கா ஒரு ஆளா நான் இருந்திருக்கேன். அவர் சினிமாவுக்குள்ள ரொம்ப விரும்பி வந்தாரு. அந்த சினிமாவுல நிறைய விஷயம் அவருக்கு கிடைச்சது. இப்படி ரகுவரன் குறித்த பல நினைவுகளை ரோகினி அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“