/indian-express-tamil/media/media_files/2025/09/30/saraswathi-poojai-2025-09-30-17-21-43.jpg)
நவராத்திரி பண்டிகையின் சிறப்புக்குரிய அங்கமாக, ஒன்பது இரவுகள் நீடிக்கும் வழிபாட்டின் நிறைவுப் பகுதியில், கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதியான அன்னை சரஸ்வதி தேவிக்கு உரிய சரஸ்வதி பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி வழிபாட்டில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் பூஜை செய்து வழிபடுவது மரபு. ஒரு மனிதனின் வாழ்க்கையில் கல்வியும் ஞானமும் மிக அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக சரஸ்வதி தேவியின் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் பூஜை செய்யும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் முக்கியமான நாள்களை பற்றி பார்ப்போம்.
ஞானம், வீரம், செல்வம் ஆகிய மூன்றும் ஒருவருக்கு அத்தியாவசியம் என்பதை உலகிற்கு உணர்த்தவே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி பண்டிகையின் மஹா நவமி தினத்தன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதாவது நாளை அக்டோபர் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடலாம்.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்கான நல்ல நேரம் (2025): 2025 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைக்கான நல்ல நேரங்கள் (Ayudha Puja Date) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நேரங்களில் உங்கள் விருப்பத்திற்கேற்ப பூஜையைச் செய்து அன்னையின் அருளைப் பெறலாம்.
காலை 09:15 முதல் 10:25 மணி வரை ஆயுத பூஜை கொண்டாடலாம்.
காலை 10:45 முதல் 11:45 மணி வரை சரஸ்வதி பூஜையைச் செய்யலாம்.
மாலை 04:45 மணி முதல் 05:45 மணிக்குள் பூஜை செய்ய நல்ல நேரமாகும்.
மாலை 06:00 மணிக்கு மேல் 07:30 மணிக்குள் இறைவனை வணங்க சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது.
சரஸ்வதி பூஜை வழிபாட்டு முறைகள்: அன்னை சரஸ்வதியின் பூரண அருள் பெற்று, கல்வி மற்றும் பணியில் முன்னேற்றம் காண, வீட்டில் உள்ள புத்தகங்கள், கல்வி சார்ந்த உபகரணங்கள், தொழிலுக்கு உதவும் ஆயுதங்கள் மற்றும் கருவிகள் போன்ற அனைத்தையும் சுத்தம் செய்து தயாராக வைக்க வேண்டும். சுத்தம் செய்த புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் சரஸ்வதி தேவியின் திருவுருவப் படம் ஆகியவற்றை திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.
சரஸ்வதி தேவிக்கு உகந்த வெள்ளை மலர்கள் மற்றும் பால் சார்ந்த நைவேத்தியங்களான காய்ச்சிய பால், பால் பாயசம் போன்றவற்றுடன் சுண்டல் வைத்துப் படைப்பது சிறப்பு. மாணவர்கள் தங்கள் புத்தகங்களை வைத்து விளக்கேற்றி, மனமுருகி வழிபட்டால் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். சரஸ்வதி தேவியின் மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்வது சிறந்தது.
பூஜை செய்யும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும் இருப்பது அவசியம். பூஜை நேரத்தில் கோபப்படுவது, வாக்குவாதங்கள் செய்வது, எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தியானம் செய்து மனதை அமைதிப்படுத்தி, கடவுளை மனதார நினைத்து, எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டி வழிபடுவது மிகவும் நல்லது. சரஸ்வதி பூஜை நாளில் நீங்கள் கல்வி சார்ந்த பொருட்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அன்னையின் அருள் பெற்று கல்வி, ஞானம், தொழில் மற்றும் பணியில் சிறந்து விளங்கலாம். இந்த நல்ல நாட்களில் விளக்கேற்றி மனமுருகி வழிபட்டால், நீங்கள் எண்ணிய விஷயங்கள் அனைத்தும் ஈடேறும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.