கொல்கத்தாவைச் சேர்ந்த சர்மிஷ்தா சக்ரபோர்த்தி எனும் பெண்ணின் வயிற்றில் வளரும் 23 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, சர்மிஷ்தா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அவரது வயிற்றில் வளரும் கரு ஒருவித நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பிறக்க அனுமதித்தால், பிறந்தவுடன் நிச்சயம் இறந்துவிடும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஒய்வி சந்திரசுத், எஸ்கே கவுல் கொண்ட பென்ச், கருவின் உடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவக் குழுவிடம் அறிக்கை கேட்டிருந்தது.
பின், சர்மிஷ்தாவும் சிறுநீரக மருத்துவர் தேவி ஷெட்டியிடம் இருந்தும் அறிக்கை வாங்கி அதனை கோர்ட்டில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், "கருவானது 'pulmonary atresia' எனப்படும் கடுமையான இதயக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், நிரந்தர மூளை சேதத்திற்கு அது வழி வகை செய்யும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை பார்த்த பின் நீதிபதி சந்திரசுத் கூறுகையில், "இது போன்ற நிகழ்வுகளில், தாயின் வாழ்க்கை தரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு முறையான அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னாலும் கூட, தன் குழந்தையின் மூளை இறந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழும் இந்த தாயின் நிலைமையை பாருங்கள்" என்றார்.
பின், அந்த பெண்ணின் 23 வார கருவை கலைக்க அனுமதி அளித்த நீதிபதிகள், "கருவினால் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அதை கலைப்பது அந்த பெண்ணின் விருப்பம்" என்று தெரிவித்தனர்.