ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி ஆறு மாசு அடைவதை தடுக்கக்கோரி தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தண்ணீர் அமைப்பின் பொருளாளர் கூறுகையில்,
நாளை காவிரி பாயும் திருச்சியில் ஆடி18 எனப்படும் ஆடிப்பெருக்கு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த திருநாளை முன்னிட்டு காலையிலேயே குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள். புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு புதிதாக தாலிப்பெருக்கு சடங்கு நடத்துவார்கள்.
இளம்பெண்கள், வாலிபர்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள். காவிரி அன்னையை வழிபட வருபவர்கள் பிளாஸ்டிக் பைகளுடன் வந்து வழிபட்டு விட்டு, பைகளை, மாலைகளை, பழைய துணிகளை ஆற்றில் விட்டு விட்டு செல்வதால் காவிரி ஆறு உள்பட நீர்நிலைகள் மாசுபடுகின்றன. எனவே, ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாட வரும் பொதுமக்கள், பக்தர்கள் காவிரி ஆற்றை மாசுபடாமல் காத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம்.
காவிரி கரைக்கு வரும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து துணிப்பைகளில் மங்களப்பொருட்களை எடுத்து வந்து படைத்தவுடன் நீர் மாசுபடும் பொருட்களை எடுத்துச்சென்றிடவும், பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றில் வீசாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டுகின்றோம் என தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“