/indian-express-tamil/media/media_files/2025/04/17/rS9P77eGBrA25YSqwgvD.jpg)
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்களில், வெயிலின் தாக்கம் காரணமாக பலரும் தங்கள் குடும்பத்துடன், குளிர் அதிகம் இருக்கும் மலைபிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். இந்த வகையில் சுற்றுலா செல்ல தமிழகத்தில் பல மலைபிரதேசங்கள் இருந்தாலும், இதில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பலதரப்பட்ட மக்களின் முக்கிய சுற்றுலா தளமாக இருக்கிறது.
அந்த வகையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் முக்கிய மலைப்பகுதி சுற்றுலா தளம் தான் ஏற்காடு. தமிழ்நாட்டில் முதன் முதலில் தோன்றிய மாவட்டம் என்று பெயர் பெற்றுள்ள சேலம் மாவட்டத்தில் இருந்து சுமார் 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏற்காடு, 5326 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் அதிக கொண்டை ஊசி (20) வளைவுகள் கொண்ட மலைப்பகுதியாகவும் இருக்கும் ஏற்காட்டில் குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன.
19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயேர்கள் இந்த ஏற்காடு பகுதியை கண்டறிந்து, இங்கு காபி மற்றும் ஆப்பிள் பழ வகைகளை அறிமுகப்படுத்தியதாக தகவல்கள் உள்ளன. இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் இந்த ஏற்காட்டில், கோவில்கள், வியூ பாயிண்ட்கள், கார்டன்கள் என சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன.
ஏற்காடு ஏரி
மரகத ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரி, ஏற்காட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாக இருக்கும் இந்த ஏரியில், நடுவில் ஒரு நீரூற்று அமைந்துள்ளது, இந்த ஏரியில், குடும்பத்துடன் படகு பயணம் செல்லவும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. படகு பயணம் செய்துகொண்டே, அருகில் உள்ள பூங்காவில் பூக்களின் அழகை ரசிக்கலாம்.
ஏரி பூங்கா
மரகத ஏரியின் மேல் அமைந்துள்ளது ஏரி பூங்கா. இந்த பூங்காவில் பல வண்ணமயமான பூக்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. குடும்பத்துடன் சென்று இந்த இயற்கை அழகை ரசிக்கலாம். அமர்ந்து பேசுவதற்காக அழகான புல் தரை அமைக்கப்பட்டுள்ளது, அதேபோல் அந்த பூங்காவில் இருந்து ஏரியின் அழகை பார்த்து ரசிக்க, கரையின் மீது, அமரும் வகையில், கற்கள் அமைக்கப்பட்டுள்ளது, இதில் அமர்ந்து ஏரியின் அழகையும், படகில் பயணம் மேற்கொள்வதையும் பார்த்து ரசிக்கலாம்.
அண்ணா பூங்கா
ஏரி பூங்காவிற்கு எதிர் திசையில அமைந்துள்ளது அண்ணா பூங்கா. இந்த பூங்காவில் பல பூக்களும், அதற்கான செடிகளும் வைக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய முறைப்படி இங்கு தனி இடம் அமைக்கப்பட்டு செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் செடிகளும், மலர்களும் நம் கவனத்தை ஈர்க்கும். அதே நேரம் புல்தரைகளில் ஓய்வு எடுக்கவும், குழந்தைகள், விளையாடுவதற்கான இடங்களும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
லேடீஸ் சீட் வியூ பாயிணட்
ஏற்காடு அண்ணா பூங்காவில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது லேடீஸ் சீட் வியூ பாயிணட். இந்த இடத்தில் இருந்து, மலையின் அழகை கண்டு ரசிக்கலாம். அதேபோல், மாலை நேரத்தில் செல்லும்போது, மலையின் மேல் இருந்து கீழே உள்ள சேலம் மாநகரையும் பார்க்கலாம். காலை நேரத்தில் இங்கு சென்றால் பனியின் காரணமாக மலை முழுவதும் பனியால் சூழ்ந்திருக்கும் என்பதால், கீழே எதுவும் தெரியவாய்ப்பில்லை. அதனால் காலை 10 மணிக்கு மேல் இங்கு சென்றால் சேலத்தின் அழகை ரசிக்கலாம். டெலஸ்கோப் வழியாக மலைகளின் அழகை ரசிக்கவும் இங்கு வசதி அமைக்கப்பட்டுள்ளது.
ஜென்ஸ் சீட் வியூ பாயிண்ட்
லேடீஸ் சீட் வியூ பாயிணட் பார்த்துவிட்டு, சற்று மேலே சென்றால், ஜென்ஸ் சீட் பார்க்கலாம். இங்கிருந்து பார்த்தால், சேலத்தில் இருந்து, மலை ஏற்காடுக்கு வரும் சாலை உட்பட மலையின் பலதரப்பட்ட அழகை ரசிக்கலாம். லேடீஸ் சீட் வியூ பாயிண்ட் பார்த்ததை விடவும் சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.
அடுத்து இங்கிருந்து உள்ளே சென்றால், 5 வியூ பாயிண்ட்டுகள் உள்ளன. இந்த வியூ பாயிண்ட்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாக தெரியும். காற்று, பறவைகளின் சத்தம் என, வித்தியாசமான புதுவித அனுபவத்தை இந்த இடம் கொடுக்கும். இந்த 5 பாயிண்ட்களையும் பார்த்துவிட்டு, அருகில் ரோஜா பார்க் பார்க்கலாம்.
பக்கோடா பாயிண்ட்
ஜென்ஸ் சீட் வியூ பாயிண்ட் இடத்தில் இருந்து 7 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது பக்கோடா பாயிண்ட். ஏற்காடுக்கு வந்தால் முக்கியமாக பார்க்க வேண்டிய வியூ பாயிணட்டாக இருக்கும் இந்த பக்கோடா பாயிண்ட்டும், சேலத்தின் அழகை மேலிருந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய தாவரவிலயல் பூங்கா
ரோஸ் கார்டன் அருகில் அமைந்துள்ளது தேசிய தாவரவிலயல் பூங்கா. 1963-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பூங்கா, 18.4 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, 3000-க்கு மேற்பட்ட மர வகைகளும், 1800-க்கு அதிகமாக செடி வகைகளும் இந்த பூங்காவில் வளர்க்ப்பட்டு வருகிறது. பூச்சி உண்ணும் பிட்சர் தாவரமும் இந்த பூங்காவில் வளர்க்கப்படுகிறது. குடும்பத்துடன் செல்லும் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை தவறாமல் பார்க்க வேண்டும்.
கிளியூர் அருவி
ஏற்காடு ஏரியில் இருந்து 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிளியூர் நீர்வீழ்ச்சி. மழை காலங்களில் இந்த அருகில் தண்ணீர் அதிகமாக இருக்கும். சுற்றுலா பயணிகள் நீராடுவதற்கு சிறப்பான அருவியாக இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/17/yercaud-6-170435.jpg)
சேர்வராயன் கோவில்
ஏற்காடு மலை சுற்றுலா செல்பவர்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று சேர்வராயன் மலை. மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைந்துள்ள ஒரு மெல்லிய குகையில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஏற்காடு ஏரியில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் இந்த கோவில் திருவிழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஏற்காடு பட்டு பண்ணை
லேடீஸ் சீட் பகுதியில் இருந்து ஜென்ஸ் சீட் பகுதிக்கு செல்லும் வழியின் இடையில் இந்த பட்டு பண்ணை அமைந்துள்ளது. பட்டுப்புழுக்களின் வாழ்க்கை சுழற்சி, புழுக்களின் முட்டை, மற்றும் அதன் கூடு பற்றி தெரிந்துகொள்ளலாம். பட்டு உற்பத்தியின் செயல்முறை குறித்தும் அறிந்துகொள்ளலாம்.
ஏற்காடு கோடை விழா
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 7 நாட்கள், ஏற்காட்டில் கோடை விழா நடக்கும். இந்த சமயத்தில், இங்கிருக்கும் பூங்காவில், மலர் கண்காட்சியும் நடத்தப்படும். இந்த விழாக்கள் மற்றும் கண்காட்சிகள் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
கட்டண விபரம்
இந்த சுற்றுலா பகுதிகளில் அனைத்திற்கும், கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ40, சிறியவர்களுக்கு ரூ20 என கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. படகுத்துறை உள்ளே செல்ல, பெரியவர்களுக்கு ரூ10, சிறியவர்களுக்கு ரூ5 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்பட்டாலும், இங்கு எந்த இடத்தில் நுழைந்தாலும், நுழைவுக்கட்டணம் குறைந்த பட்சம் ரூ40 வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, மற்றும் மரகத ஏரி அமைந்துள்ள ஏற்காடு சுற்றுலா தளத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் இந்த இடத்தில் இரவு நேரத்தில் தெரு மின் விளக்குகள் வேலை செய்யவதில்லை. வாகனங்கள் மற்றும் திறந்திருக்கும் கடைகளின் மின் விளக்குகளில் இருந்து வரும் வெளிச்சமே சாலையில் தெரிகிறது.
இது பற்றி அங்கிருக்கும் கடைக்காரர் ஒருவரிடம் விசாரித்தபோது ‘’நான் இங்கு கடை வைத்ததில் இருந்து இந்த லைட்கள் இப்படியேதான் இருக்கிறது என்று கூறியுள்ளார். ஏற்காட்டின் முக்கிய பகுதியாக இருக்கும் இந்த இடத்தில், இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் சாப்பாடு வாங்கவோ, அல்லது தங்கள் குழந்தைகளுடன் வெளியில் வரவோ முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னையை தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் கவனித்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.