திருநெல்வேலி, ஜூன் 28: நெல்லை மாவட்டம் வி.எம். சத்திரம் பீர்க்கன்குளம் குளத்தை மீட்டெடுக்கும் மகத்தான பணியில் இளைஞர் படை களமிறங்கியுள்ளது. இவர்களுக்கு உறுதுணையாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கைகோர்த்துள்ளது, நெல்லை மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை வட்டம், வார்டு எண் 38-ல் அமைந்துள்ள வி.எம். சத்திரம் கிராமம், ஏழு குளங்களைக் கொண்டது. இவற்றில் முக்கியமான பீர்க்கன்குளம், முட்புதர்களாலும் குப்பைகளாலும் சூழப்பட்டு, போதிய பராமரிப்பின்றி சீரழிந்து காணப்பட்டது. இச்சூழலில், வி.எம். சத்திரம் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், இந்தக் குளத்தைத் தூர்வாரும் பெரும் பொறுப்பைத் தங்கள் தோள்களில் சுமக்கத் தீர்மானித்தனர். மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு குளத்தைத் தூர்வாரும் மற்றும் மறுசீரமைக்கும் துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/28/whatsapp-image-2025-06-28-14-09-07.jpeg)
இளைஞர்களின் தன்னலமற்ற இம்முயற்சியைப் பாராட்டும் விதமாக, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. சுகுமார், மாநகராட்சி ஆணையர். மோனிகா ராணா, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை மாநகர மேயர் இராமகிருஷ்ணன், நெல்லை மாநகர துணை மேயர் கே.ஆர்.ராஜு உள்ளிட்ட முக்கிய மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் இவ்விழாவில் பங்கேற்றது இந்நிகழ்வுக்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/28/whatsapp-image-2025-2025-06-28-14-09-34.jpeg)
மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் ஆகியோர் கொடியசைத்து இந்தப் பணியைத் துவக்கி வைத்தனர். இப்பணிக்கான ஏற்பாடுகளை வி.எம். சத்திரம் மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த செந்தில், முத்து பட்டன், சுரேஷ், மகாராஜன், முத்து மகேஷ் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
குளத்தின் மறுசீரமைப்புப் பணி குறித்து அப்பகுதி மக்களுள் ஒருவரான வாசன் கூறுகையில், "இந்தப் பீர்க்கன்குளம் முன்பு முழுவதும் குப்பைக் காடாகவும், கருவேல மரங்கள் நிறைந்தும் காணப்பட்டது. இதைத் தூர்வாரும் இந்த முயற்சி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதே அமைப்பு இதற்கு முன்பு அருகில் உள்ள மூர்த்தி நயினார் குளத்தையும் தூர்வாரி உள்ளனர். கடந்த வெள்ளத்தின்போது பெரும்பாலான குளங்கள் உடைந்த நிலையில், இந்த மூர்த்தி நயினார் குளம் மட்டும் உடையவில்லை. இந்தக் குளத்தைத் தூர்வாருவதன் மூலம் வெள்ள பாதிப்பைத் தடுக்கலாம், நிலத்தடி நீர் பெருகும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இந்த அரிய முயற்சியை எடுத்த இளைஞர்களுக்கு என் வாழ்த்துகள்," என்றார் உணர்ச்சிபொங்க.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/28/whatsapp-image-2025-2025-06-28-14-10-03.jpeg)
தூர்வாரும் பணியில் ஈடுபட்ட வி.எம். சத்திரம் இளைஞர் செந்தில் கூறுகையில், "வி.எம். சத்திரத்தில் மொத்தம் ஏழு குளங்கள் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டு மூர்த்தி நாயனார் குளத்தை மறுசீரமைத்தோம். இந்த ஆண்டு பீர்க்கன்குளத்தைத் தூர்வாரத் தீர்மானித்துள்ளோம். குளத்தைச் சுற்றிலும் நான்கு பக்கமும் கரை அமைத்து, கருவேல மரங்களை வேரோடு அகற்ற உள்ளோம். மேலும், பறவைகள் தங்குவதற்கு வசதியாகப் பறவைகள் திட்டு அமைக்கவும், நீர் தேங்குவதற்காக நான்கு ரீசார்ஜ் பிட்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். கரைகளில் மரக்கன்றுகள் நடவும் முடிவு செய்துள்ளோம். குளத்தைச் சுற்றியுள்ள மக்களிடையே நீர்நிலைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எண்ணியுள்ளோம். இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களும், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் எங்களுக்கு ஆதரவளித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது முழுக்க முழுக்க வி.எம். சத்திரம் மேம்பாட்டு அமைப்பின் இளைஞர்களின் சொந்த நிதியில் மேற்கொள்ளப்படும் ஒரு முன்முயற்சி. இந்தக் குளம் முடிந்ததும் அடுத்தடுத்த குளங்களையும் தூர்வாரும் திட்டம் எங்களிடம் உள்ளது," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இளைஞர்களின் இந்தச் சிறப்பான முயற்சி, அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவுடன், வருங்காலச் சந்ததியினருக்கு நீர்நிலைகளைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.