திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள காப்புக்காட்டில் யானைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இது குறித்த விவரம் வருமாறு;
பல்லுயிர்ப் பெருக்கத்தில் முக்கிய அங்கமாக இருக்கும் உயிரினம் யானை. காடுகளில் தாவரங்கள் வளர முக்கிய பங்கு வகிக்கும் யானைகள், எண்ணற்ற உயிரினங்களுக்கும் உணவு கிடைக்க வழிவகை செய்கின்றன. உலகளவில் 50 ஆயிரம் ஆசிய யானைகள் உள்ளது. இதில் 27 ஆயிரம் யானைகள் இந்தியாவில் வாழ்கின்றன.. அதிலும், நீலகிரியை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டும் 6 ஆயிரம் யானைகள் உள்ளன.
பிரமாண்ட உருவம் கொண்டுள்ள போதும் சாதுவான விலங்காக காணப்படும் யானை, மனிதர்களிடம் நீண்ட நெடிய வரலாற்று தொடர்பை உடையது.
இருப்பினும், அண்மைக்காலமாக யானைகளின் வாழ்விடம் பறிக்கப்படுவதால், உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளை நாடும் நிலை உருவாகிறது. இதனால், மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே எதிர்பாராத மோதல் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. விளைநிலங்களில் அமைக்கப்படும் மின்வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுபோக, ரயில் மோதி பலியாகும் சோகக் கதையும் தொடர்கிறது.
நிகழ்கால சூழலில், யானைகள் உடனான முரணை தவிர்ப்பது என்பது சிக்கலானதாக மாறிவிட்டது. இதனால், அதனுடன் இசைந்து வாழ மனிதர்கள் பழக வேண்டும் என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.
அதேபோல், காடுகள் செழிக்க, பல்லுயிர்கள் பெருக முக்கிய காரணமாக உள்ள பேரூயிரான யானைகளை காப்பாற்றுவதும், இனப்பெருக்கம் செய்ய வழிவகை செய்வதும் அரசின் கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அந்தவகையில், யானைகளை பாதுகாக்கவும், மறுவாழ்வு கொடுக்கும் மையமாக திகழ்கிறது திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையம்.
எம்.ஆர்.பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் தமிழ்நாடு வனத்துறை சார்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் தனியார் மற்றும் கோவில் யானைகள், நோய்வாய்ப்பட்ட யானைகள், நீதிமன்ற உத்தரவின்படி கொண்டுவரப்பட்ட யானைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சம்பந்தப்பட்ட யானைகளுக்கு தேவையான உணவுகள் வனத்துறை மூலம் வழங்கப்பட்டு, யானை பாகன்கள் மற்றும் காவடிகள் மூலம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
யானைகளை உற்சாகப்படுத்தவும், பாகன்களையும் பெருமிதப்படுத்தவும் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு எம்.ஆர் பாளையத்தில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
அங்கு உள்ள 8-க்கும் மேற்பட்ட யானைகளுக்கு மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் கரும்பு, பப்பாளி, அன்னாசி, வாழைப்பழம், தர்பூசணி உள்ளிட பழ வகைகள் யானைகளுக்கு வழங்கப்பட்டு உற்சாகமாக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதேபோல் திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோவில்களில் உள்ள யானைகளுக்கும் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட வன அலுவலர் மற்றும் சம்பத்குமார் உதவி இயக்குனர் மற்றும் உதவி வன பாதுகாவலர் மற்றும் சுப்பிரமணியன் வனசரக அலுவலர் மற்றும் களப் பணியாளர்கள் கலந்து கொண்டு முன்பு குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.