சமீபத்தில் சமூக ஊடகங்களை ஸ்க்ரோலிங் செய்யும் போது, வெதுவெதுப்பான நீர் எந்த சரும பிரச்சனைக்கும் எதிராக செயல்படும், மேலும் அதை பளபளப்பாக்கும் என்று கூறும் ஒரு பதிவு நம் கவனத்தை ஈர்த்தது.
Indian_Veg_Diet இன்ஸ்டாகிராம் பக்கம், தோல் பிரச்சனை அல்லது முகத்திற்கு இயற்கையான பொலிவைக் கொண்டு வருவதற்கு வெதுவெதுப்பான நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக குறிப்பிட்டது. இதை செய்தால், உண்மையில், சில நாட்களில், உங்கள் தோல் பளபளப்பாகவும், பருக்கள் இல்லாததாகவும் மாறும். ஆனால், அது உண்மையில் உதவுமா?
இந்த பதிலைக் கண்டுபிடிக்க, நாங்கள் நிபுணர்களை அணுகினோம்.
தோல் மருத்துவர் ஜெய்ஸ்ரீ ஷரத், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில்; வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் வியர்வை ஏற்படுகிறது, இது உடலில் இருந்து நச்சுகளை வெளியிடுவதற்கான இயற்கையான வழிமுறையாகும். சூடான நீர் குடிப்பது கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. வெதுவெதுப்பான நீர் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுவதன் மூலம் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. குடல் சுத்தமாக இருந்தால், சருமமும் சுத்தமாக இருக்கும் என்று டாக்டர் ஷரத் கூறினார்.
இருப்பினும், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், மூக்கடைப்பு சரியாவது மற்றும் சிறிதளவு கூடுதல் வியர்வை ஏற்படுவதைத் தவிர, சருமத்திற்கு நேரடியான பலன்கள் இருப்பதற்கான அறிவியல் சான்றுகள் மிகக் குறைவு. இது நீராவி பிடிப்பது அல்லது உடற்பயிற்சி போன்ற பிற முறைகளிலும் பெறலாம்
ஆனால் வெதுவெதுப்பான நீர் இயற்கையாகவே உடலை நச்சுத்தன்மை நீக்க உதவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
வெதுவெதுப்பான நீர் சருமத்தை ஹைட்ரேட் செய்கிறது, வறட்சி ஏற்படாமல் இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, இது சருமத்தை இயற்கையாகப் பளபளக்க உதவுகிறது, என்று தோல் மருத்துவ நிபுணர் ரிங்கி கபூர் கூறினார்.
வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது என்று டாக்டர் கபூர் கூறினார். சரியான இரத்த ஓட்டம் தோல் செல்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும், மேலும் ஆரோக்கியமான சருமத்தையும் பெறுவீர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
எவ்வளவு குடிக்கலாம்?
டாக்டர் ஷரத், குடல் சுத்தமாக இருந்தால், தோல் சுத்தமாக இருக்கும் என்று கூறினார். உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும் போது, தோல் நீரிழப்புக்கு ஆளாகிறது. எனவே, ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிப்பது முக்கியம். சிறுநீரகங்கள் அல்லது இதய நோய்கள் இருந்தால், நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.
தோலின் மேல் அடுக்குகள் ஆழமான சரும செல்களிலிருந்து தண்ணீரைப் பெறுவதில்லை. மாறாக சுற்றுச்சூழலில் இருந்து தண்ணீர் எடுக்கிறது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சருமத்தை ஈரப்பதமாக்குவதும் முக்கியம், என்றார் டாக்டர் ஷரத்.
யு.எஸ். நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ், இன்ஜினியரிங் மற்றும் மெடிசின் படி, ஆண்கள் ஒரு நாளைக்கு சுமார் 3.7 லிட்டர், பெண்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2.7 லிட்டர் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கிறது. உங்கள் உடலுக்குத் தேவையான நீரின் அளவு, காலநிலை, உங்கள் உடல் எடை, பாலினம் மற்றும் உடல் செயல்பாடுகளின் அளவைப் பொறுத்தது. அதிகப்படியான நீர் சோடியம் குறைவதற்கு வழிவகுக்கும் (இது செல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது) ஹைபோநெட்ரீமியாவை ஏற்படுத்தும் என்று டாக்டர் ஷரத் எச்சரித்தார்.
வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் குடித்தால் போதுமா?
தண்ணீர் மட்டும் குடிப்பதால் சருமத்தில் எந்த பலனும் இருக்காது. பளிச்சென்ற நிறமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள், பச்சை இலைகள், சர்க்கரை தவிர்ப்பது, குறைந்த உப்பு, ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவை ஒருவர் கொண்டிருக்க வேண்டும். இவை உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ஷரத் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.