/indian-express-tamil/media/media_files/2025/03/18/jGIWwu4pJ1Sj84z3CcIT.jpg)
இந்திய ஆராய்ச்சியாளர்கள் குழு சில நோயாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட வகை நுரையீரல் புற்றுநோய், மீண்டும் வருவதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளனர். இது நோய்க்கான சிகிச்சை முறையை மாற்றும் கண்டுபிடிப்பாகும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Why does lung cancer recur? It’s all in the genes, finds new study
புற்றுநோயால் உலக அளவில் உயிரிழப்பவர்களில், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதிகம். இவை தாமதமாக கண்டறியப்படுவதும் இதற்கு ஒரு காரணம். இந்திய ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு, நுரையீரல் அடினோகார்சினோமாவுடன் தொடர்புடையது. இது மிகவும் பொதுவான வகை நுரையீரல் புற்றுநோயாகும். இது பெரும்பாலும் புகைபிடிக்காதவர்களையும் பாதிக்கிறது.
இந்த குறிப்பிட்ட வகை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எபிடெர்மல் க்ரோத் ரிசெப்டர் ஃபேக்டர் (EGFR) மரபணுவில் ஒரு குறிப்பிட்ட பிறழ்வைக் கொண்டுள்ளனர். புற்றுநோய் உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியை அடக்கும் "EGFR டைரோசின் கைனேஸ் இன்ஹிபிட்டர்கள்" எனப்படும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனினும், பல நோயாளிகளுக்கு இறுதியில் மீண்டும் புற்றுநோயின் பாதிப்பு திரும்பியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம், மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மையம் மற்றும் புனேவில் உள்ள ஒரு செல் கண்டறிதல் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய இந்தியக் குழுவினர், நோயாளிகளுக்கு மீண்டும் புற்றுநோய் திரும்பும் வாய்ப்பை கண்டறிந்தனர். இதற்காக, 483 நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளிடமிருந்து தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைக்கும் தன்மை குறைவாக காணப்பட்டது.
ஐரோப்பிய மருத்துவ ஆன்காலஜி வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி, மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்று கருதப்படும் நோயாளிகளை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையை மாற்றி அமைப்பதன் மூலம் நோயின் தாக்கத்தை குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"இந்த கூடுதல் பிறழ்வுகள் கொண்ட நோயாளிகளின் சராசரி வாழ்நாள் 51.11 மாதங்கள் ஆகும். பிறழ்வு ஏற்படாதவர்களின் சராசரி வாழ்நாள் 99.3 மாதங்களாக இருக்கிறது" என்று பேராசிரியர் அமித் தத் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய புற்றுநோய் புள்ளிவிவர தரவுத்தளத்தின்படி, இந்தியாவில் 2022-ஆம் ஆண்டில், 81,748 புதிய நுரையீரல் புற்றுநோய்கள் மற்றும் 75,031 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆய்வுக்கு அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆதரவு அளித்தன. பேராசிரியர் தத்தின் வழிகாட்டுதலின் கீழ் பட்டதாரி மாணவியான சுப்ரியா ஹைட் மற்றும் டாடா மெமோரியல் சென்டரைச் சேர்ந்த டாக்டர் குமார் பிரபாஷ், டாக்டர் ஜெயந்த் கந்தாரே, டாக்டர் கவுஹர் ஷாஃபி மற்றும் ஒரு செல் கண்டறியும் குழுவுடன் இணைந்து இது நடத்தப்பட்டது.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 16 நோயாளிகளிடமிருந்து கட்டி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவர்கள் விரிவான மரபணு வரிசைமுறை ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். சிகிச்சையை தடுப்பதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வின் ஒரு முக்கிய அம்சம் திரவ பயாப்ஸியைப் பயன்படுத்துவதாகும். அதன்படி, ஒரு செல் கண்டறிதல் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு விரிவான மரபணு விவரக் குழுவைப் பயன்படுத்தி இரத்தத்தில் உள்ள புற்றுநோய் தொடர்பான டி.என்.ஏ துண்டுகளைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனை முறையாக இது கருதப்படுகிறது.
காலப்போக்கில் 25 நோயாளிகளிடமிருந்து 200 இரத்த மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், சிகிச்சையின் போது கட்டிகளின் மரபணு அமைப்பு எவ்வாறு உருவானது என்பதை குழுவால் கண்காணிக்க முடிந்தது. ஆரம்பத்தில் (சிகிச்சையைத் தொடங்கிய 10 மாதங்களுக்குள்) புற்றுநோய் திரும்பிய நோயாளிகளில் உள்ள பிறழ்வுகள், ஏற்கனவே இருந்ததாக தெரிகிறது. இவை காலப்போக்கில் அதிக ஆதிக்கம் செலுத்தின. இந்த பிறழ்வுகள் தொடக்கத்திலிருந்தே எதிர்ப்பிற்கு பங்களிக்கின்றன என்று கூறுகின்றனர்.
"இது போன்ற பிறழ்வுகளை கொண்ட நோயாளிகளை தொடக்கத்திலேயே கண்டறிந்தால், அவர்களின் சிகிச்சையை திறம்பட வடிவமைக்க முடியும்" என பேராசிரியர் தத் தெரிவித்தார்.
- Anuradha Mascarenhas
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.