கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் சீரமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆறு மாதங்களில், நிகழ்ச்சிகளைக் காண்பிக்கும் எல்.இ.டி சுவர், சிறப்பு ஒளி அமைப்புகள், புதுப்பிக்கப்பட்ட தளங்கள் மற்றும் புதிய மரச்சாமான்கள் உள்ளிட்ட பல மாற்றங்களை புதுப்பித்து பார்வையாளர்களை வரவேற்க இருக்கின்றனர்.
நூலகத்தில் கசிந்த கூரைகள் மற்றும் சேதமடைந்த கண்ணாடி பேனல்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. வாகன நிறுத்துமிடம் மற்றும் நூலகத்தின் நுழைவாயில் ஆகியவை நன்கு வெளிச்சமாக மாற்றப்படும்.
மேலும் ஆடிட்டோரியங்களில் மற்றும் மாநாட்டு அரங்குகளில் மேம்படுத்தப்பட்ட விளக்குகள், ஒலி அமைப்புகள் மற்றும் ப்ரொஜெக்டர்கள் வைத்து மக்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தைப் குடுக்கவிருக்கிறார்கள்.
புதிய புத்தகத் தொகுப்புகளுடன் ஆறு லட்சம் புத்தகங்களை சேகரிக்க 5 கோடி ரூபாயும், மின் புத்தகங்கள் மற்றும் மின் இதழ்களுக்கு 1.5 கோடி ரூபாய் என அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் கடந்த வாரம் தொடங்கினர். அரசியல் காரணங்களால் கடந்த பத்தாண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட நூலகத்தை சீரமைத்து மீட்டெடுக்க மாநில அரசு 29 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
“நூலகத்தின் உள்கட்டமைப்பைப் பழுதுபார்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் 29 கோடி ரூபாய் செலவழிக்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய புத்தகங்கள், இ-புத்தகங்கள் மற்றும் இ-ஜர்னல்கள் வாங்குவதற்கு அரசாங்கம் 6.5 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது” என்று பொது நூலக இயக்குனரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வெளியிடப்படும் தகவல்களையும், ஆராய்ச்சிகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க ஏற்பாடுகளை அண்ணா நூலகம் மேற்கொண்டு வருகிறது.
“நூலகத்தை மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட தொகை வந்தவுடன் பணியை மேற்கொள்வோம், புதிய புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்குவோம். இவை முன்னணி நிறுவனங்களின் பட்டியல்கள் மற்றும் முன்னணி புத்தகக் கழகங்களின் பரிந்துரைகள் மற்றும் தரவரிசை, விருது பெற்ற தலைப்புகள் மற்றும் ஆசிரியர்களின் தரவரிசை ஆகியவற்றின் அடிப்படையில் வாங்கப்படும்” நூலகத்தில் பணிபுரிபவர்கள் கூறுகிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி, அண்ணா நூலகத்தை திறந்துவைத்த பொழுது, இங்கு சுமார் 12 லட்சம் புத்தகங்கள் மற்றும் 2 லட்சம் இ- புத்தகங்கள் சேகரித்து வைக்க வேண்டும் என்று குறிக்கோளாக வைத்தனர். ஆனால், தற்போது 6 லட்சம் புத்தகங்கள் மற்றும் 2 லட்சம் இ- புத்தகங்கள் மட்டுமே உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும் என்று நூலக இயக்குனரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
சிங்கப்பூர் தேசிய நூலகத்தை அடிப்படையாக வைத்து, அண்ணா நூலகத்திலும் பல அறிய வகையான புத்தகங்கள்; கலை நிகழ்ச்சிகளுக்கான பிரத்யேக மையம், அதில் நாடகம், இசை மற்றும் பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளனர். இதற்காக, மாபெரும் ஆம்பித்தேட்டர் மற்றும் மண்டபம் ஆகியவை கட்டுவதற்கானப் பணி தொடங்கவுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil