ஜனவரி 6-ம் தேதி சென்னை புத்தக கண்காட்சி தொடங்க உள்ளது, இதற்காகவே தமிழக பதிப்பாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பப்பாசி) தங்களுக்கு ஸ்டால் வழங்க மறுப்பதாக சால்ட் பதிப்பகத்தின் உரிமையாளர் நரன் தெரிவித்துள்ளார்.
எல்லா வருடமும் சென்னையில் தமிழக அரசுடன், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து புத்தக திருவிழாவை நடத்தி வருகிறது. புத்தக திருவிழா மூலம் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் தங்களது படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். வருகின்ற 6-ம் தேதி சென்னை புத்தக திருவிழா தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தங்களுக்கு ஸ்டால் வழங்கவில்லை என்று எழுத்தாளர் மற்றும் சால்ட் பதிப்பகத்தின் உரிமையாளருமான நரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பல முறை பப்பாசியிடம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். புதியவர்களுக்கு ஸ்டால் கிடையாது என்பதுதான் அவர்களது பதிலாக இருக்கிறது என்று நரன் கூறுகிறார். சங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் ஸ்டால் வைத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் நரன்.
“இப்படி நடப்பது முதல்முறையல்ல நீலம் பண்பாட்டு மையத்திற்கு இதுதான் நடந்தது. திருங்கைகளுக்கும் முதலில் ஸ்டால் ஒதுக்க மறுத்தனர். ஆனால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகுதான் அவர்களுக்கு ஸ்டால் ஒதுக்கப்பட்டது. “ என்கிறார் நரன்.
இந்நிலையில் நரனுக்கு ஆதரவாக எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன், ஓவியர் சந்தோஷ் நாராயணன் முகநூலில் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அவர்கள் கூறுகையில் “ இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் படைப்பை தொடர்ந்து வெளியிட்டு வரும் சால்ட் பதிப்பகத்திற்கு உடனடியாக ஸ்டால் ஒதுக்க வேண்டும் “ என்று தெரிவித்துள்ளனர்.
” உறுப்பினர்களாக புதியவர்களை சேர்க்க பப்பாசி அனுமதிக்கவில்லை. மேலும் வெளிப்படைத் தன்மை இல்லை. இதுவரை சால்ட் பதிப்பகம் 47 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் மட்டும் 7 புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். நல்ல புத்தகங்களை வெளியிடும் எங்களை போன்ற பதிப்பாளர்களுக்கு ஸ்டால் கொடுக்க மறுப்பதுதான் அறமா? என்று நரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக பப்பாசியின் செயலாளர் எஸ்.கே முருகனிடம் பேசினோம் . ” இளம் எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் பப்பாசி வரவேற்கிறது. தனியாக ஸ்டால் கொடுக்க எங்களிடம் இடம் இல்லை. மேலும் சால்ட் பதிப்பகம் புதிதாக 10 புத்தகம்-தான் வைத்துள்ளது. அதற்காக ஒரு தனி புத்தக அடுக்கை தருகிறோம் என்று கூறினோம். இதுபோல புது பதிப்பாளர்கள் தங்களது புத்தகத்தை காட்சிப்படுத்தவே ஒரு ஸ்டால் தனியாக அமைத்துள்ளோம் .அதில் ஒரு புத்தக அடுக்கை தருவதாக கூறினோம். ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எங்களுக்கு எதிராக பரப்புரை செய்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.