இந்தியாவில் தற்போது முப்படை ராணுவம் சிறப்பாக இயங்கி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்திய ராணுவத்தை முதன் முதலில் கட்டமைத்த பெருமைக்கு சொந்தக்காரரான நேதாஜி, இந்திய மண்ணில் சுதந்திரத்திற்காக அகிம்சைக்கு அப்பாற்பட்டு குரல் கொடுத்த நபர்களில் முக்கியமானவர்.
1897 மேற்கு வங்கத்தில் பிறந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கிய தலைவர்களின் சரித்திர பட்டியலில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பெற்றுள்ளார். அதேபோல் இந்திய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு முக்கியத்துவம் பெறவும், தமிழகத்தில் இருந்து பல ராணுவ வீரர்களை உருவாக்குவதற்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தவர்தான் நேதாஜி.
இந்திய விடுதலைக்காகவும், இந்திய ராணுவத்தை கட்டமைக்கவும், கடுமையாக உழைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான புத்தகம் நேதாஜி நேற்று இன்று நாளை. இந்திய மக்களுக்காக கடுமையாக உழைத்த நேதாஜி தமிழ்நாடு முக்கியமாக கருத காரணம் என்ன? தமிழகத்திற்கும் அவருக்கும் இடையேயான தொடர்பு குறித்து விவரிப்பதே இந்த நூலின் தனி சிறப்பு.
பத்திரிக்கையாளர் டாக்டர் எம்.ஆர்.ஜெயகிருஷ்ணன் எழுதியுள்ள இந்த புத்தகம், நேதாஜியின் முதல் தமிழக வருகையுடன் தொடங்குகிறது. அடுத்து 2-வது தமிழக வருகை, தமிழகத்தில் அவர் ஆற்றிய முதல் தமிழ் உரை உள்ளிட்ட பல விபரங்கள் குறித்த கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதேபோல் சுதந்திரத்திற்கு முன் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் நேதாஜிக்கும் இருந்த மோதல் குறித்த தகவலும் உள்ளது.
அதேபோல் சாவர்கக்ர் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டாரா என்று பலரும் இணையதளங்களில் ட்ரோல் செய்து வந்தாலும், நேதாஜிக்கு வெளிநாடு செல்ல உதவியதே சாவர்க்கர்தான் என்றும், அவர்களுக்கு இடையேயான நட்பு குறித்தும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தை கட்டமைக்கும் முயற்சியில் நேதாஜி ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று இந்திய படைகளை திரட்டியது தொடர் அவரின் பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் பிறந்திருந்தாலும் நேதாஜிக்கும் தமிழகத்திற்கும் ஒரு ஆழமான நட்பு இருந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் முத்துராமலிங்க தேவர். இந்திய ராணுவத்திற்கு நேதாஜி வீரர்களை கேட்டபோது முத்துராமலிங்க தேவர் தமிழகத்தில் இருந்து பலரையும் இந்திய ராணுவத்திற்காக கொடுத்தார். இதற்கு முக்கிய காரணம் நேதாஜிக்கும் தேவருக்கும் இடையேயான நட்புதான் என்ற வரலாறு உள்ளது.
இந்த வரலாறு குறித்தும், நேதாஜி முத்துராமலிங்க தேவர் முதல் சந்திப்பில் இருந்து அவர்கள் சுதந்திரத்திற்காக இணைந்து பாடுபட்ட பல முயற்சிகள் குறித்த விபரங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. அதேபோல் நேதாஜியின் முதல் உரை, அவரின் சித்தாங்தங்கள், நினைவுகள் உள்ளிட்ட பலவற்றின் தொகுப்பாக இப்புத்தகம் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“