Advertisment

பிக்பாஸ்.... கொடுமையின் உச்சக்கட்டம்!

இதன் உச்சக்கட்டம் எங்கு போய் முடியும் தெரியுமா? தினம் தினம் இந்த பிக்பாஸ் ஷோவை பார்க்கும் மக்களுக்கு....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிக்பாஸ்.... கொடுமையின் உச்சக்கட்டம்!

வட்டிக்கு பணம் வாங்கி அதைக் திருப்பிக் கொடுக்க முடியாமல், வட்டிக்கு வாங்கியவரிடம் சிக்கி சீரழிவதை அப்படியே 2.0 வெர்ஷனில் ஒரு நிகழ்ச்சியாக எடுத்தால்.... அது தான் பிக்பாஸ்.

Advertisment

நேரடியாக விஷயத்திற்கே வருவோம். ஸ்ரீ, ஓவியா, கஞ்சா கருப்பு, அனுயா, சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆர்த்தி, காயத்ரி, ஆரவ், ரைஸா, வையாபுரி, நமீதா, பரணி, ஜுலி, சக்திவேல் வாசு என மொத்தம் 15 பேர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஆரம்பம் முதலேயே நடிகர் ஸ்ரீ மற்ற போட்டியாளர்கள் யாரிடமும் ஒட்டாமல் தனியாகவே இருந்தார். யார் பேச்சுக் கொடுத்தாலும் அளவோடு தான் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் எவ்வளவோ தைரியம் கொடுத்தும் அப்படியே தான் இருந்தார்.

இந்நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஸ்ரீ தெரிவிக்கிறார். உடனே அவரை மருத்துவர் கொண்டு பரிசோதிப்பதாக 'பிக்பாஸ்' குழு தெரிவிக்கிறது. பரிசோதனை முடிந்த பின், அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் உடனடியாக பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேற வேண்டும் என மருத்துவர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் அவரை வெளியேற்றுவதாக பிக் பாஸ் அறிவித்தது.

ஆனால், இதே போன்று நமீதா தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறுகிறார். ஆனால், அவரை மருத்துவர் கொண்டு பிக்பாஸ் பரிசோதனை கூட செய்யவில்லை. இத்தனைக்கும் அவர் ஒரு பெண். 'எனக்கு மிகவும் உடம்பு முடியவில்லை. இதற்கு மேல் என் உடம்பு தாங்காது' என நமீதா கூறியும், அவர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படவில்லை.

இங்கே நாம் யோசிக்க வேண்டிய விஷயம் இதுதான். போட்டியாளர்கள் யாரோடும், எந்த சச்சரவும் செய்யாமல், அமைதியாக இருந்த ஸ்ரீ உடனடியாக சிகிச்சை என்ற பெயரில் வெளியேற்றப்பட்டார். ஆனால், நமீதா? அவருக்கும் தானே உடல்நிலை சரியில்லை. அது உண்மையோ பொய்யோ.. ஆனால், குறைந்தது செக்கப் ஆவது செய்திருக்க வேண்டுமே? ஆனால், பிக்பாஸ் அதை செய்யவில்லை. காரணம், நமீதா பிக்பாஸ் இல்லத்தில் இருப்பதே, பார்வையாளர்களை எளிதில் டிவி முன்பு கொண்டு வந்து அமரச் செய்யும் என்பதால் தான். மக்கள் ஸ்ரீயின் அழுகை முகத்தை பார்க்க விரும்புவார்களா? அல்லது நமீதாவின் கவர்ச்சி ஃபிட் டிரஸிங்கை பார்க்க விரும்புவார்களா? கவர்ச்சியை விடுங்கள். நாலு பேரோடு பேசினால் தானே அங்கு பிரச்சனை வரும். அப்போது தானே டிஆர்பி ஏறும்!. சும்மா யாரிடமும் பேசாமலே இருந்தால்!? அந்த பிக்பாஸ் வீட்டில், ஸ்ரீயை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தான் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார்.

அனுயா வெளியேற்றம்:

அடுத்ததாக, முறைப்படி மக்கள் வாக்களித்து வெளியேற்றப்படும் அல்லது காப்பாற்றப்படும் சுற்று இப்போதுதான் ஆரம்பமாகிறது. இந்த முதல் வார எலிமினேஷனில், பிக் பாஸ் போட்டியாளர்களில் பெரும்பாலானோர் அனுயா மற்றும் ஜுலி வெளியேற வேண்டும் என தேர்ந்தெடுத்தனர். அதில், அனுயா வெளியேற்றப்படுகிறார். இங்கே அனுயா யாரிடமும் பிரச்சனை செய்யவில்லை. யாரிடமும் சண்டை போடவில்லை. யாரும் அவரை திட்டவும் இல்லை, கஞ்சா கருப்பை தவிர. அவரும் அனுயாவை நேரடியாக திட்டவில்லை. பரணியை பற்றி அனுயாவிடம் திட்டுகிறார், அவ்வளவு தான். ஆனால், போட்டியில் வெளியேற்றப்பட்டது அனுயா.

காரணம், அவர் தான் எந்த வம்பு தும்புவிற்கும் போகவில்லையே. அவரும் ஒரு கவர்ச்சி பொருளாக அங்கே இருக்க பிக்பாஸ் செய்திருக்கலாமே என்று கேட்கலாம். கட்டிப்பிடித்து சண்டை போடுவதில் உள்ள சுவாரஸ்யம், கட்டிப்பிடிக்கும் சுவாரஸ்யத்தை விட அதிகம் என்பதால் தான்.

ஆனால், ஜுலியை அங்கு பெரும்பாலானோருக்கு பிடிக்கவில்லை. அவர் இருப்பதை யாரும் அங்கு விரும்பவும் இல்லை. ஆனால், அவரை மக்கள் காப்பாற்றியிருப்பதாக கூறி , மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே இருக்க வைக்கப்படுகிறார். அடுத்தவாரமும் (கடந்த வாரம்) ஜுலியால் பிக்பாஸ் இல்லத்தில் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆர்த்திக்கும், ஜுலிக்கும், காயத்ரிக்கு இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதெல்லாம் அனுயா இருந்தால் ஏற்பட்டிருக்குமா?

கஞ்சா கருப்பு வெளியேற்றம்:

கடந்தவராம் மொத்தம் மூன்று பேரை பிக்பாஸ் போட்டியாளர்கள் வெளியேற்ற முன் வைக்கின்றனர். இம்முறை போட்டியாளர்களின் அதிக வெறுப்போடு, சொல்லப்போனால் அனைவரும் முன்மொழிந்த பெயர் பரணி. அடுத்ததாக ஓவியா, கஞ்சா கருப்பு.

முதல் சில நாட்களில், பரணியுடன் பிக்பாஸ் இல்லத்தில் இருந்த சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. காயத்ரிக்கும் பரணிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கஞ்சா கருப்பு, பரணியை சிலிண்டரை தூக்கி அடிக்கும் ரேஞ்சுக்கே சென்றுவிட்டார். ஆனால், ஆரம்பத்தில் முரண்டுப் பிடித்த பரணி, பின் அனைத்திற்கும் அமைதியாகவே பதில் அளிக்கிறார். பதில் அளித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில், யாரிடமும் பேசாமல், கொடுத்த வேலையை மட்டும் செய்துவிட்டு, பிக்பாஸ் வீட்டின் வாசலில் வைரமுத்துவை போல் இங்கும் அங்கும் நடக்க ஆரம்பித்துவிட்டார்.

இப்போது அவர் யாரிடமும் சண்டை போடவும் இல்லை. யார் வம்பிற்கும் செல்லவில்லை. அனைத்தையும் சிரித்தே மழுப்பி விடுகிறார். தானாக வரும் வம்பையும் பொருட்படுத்தவில்லை. அங்கு இருப்பதில் அவருக்கு 200% விருப்பம் இல்லை. மற்றவர்களுக்கு 300% விருப்பம் இல்லை.

அதேசமயம், கஞ்சா கருப்பின் காமெடி பிக்பாஸ் வீட்டில் களைகட்டுகிறது. ஓவியாவைத் தவிர யாரிடமும் அதிகம் நெருங்காமல் இருந்த ரைஸா கூட, கஞ்சா கருப்பின் காமெடியில் அவரிடம் நன்றாக ஒட்டிக் கொள்கிறார். இந்த வார ஹவுஸ் லீடர் காயத்ரி, ஆர்த்தி என அனைவரிடமும் எந்த சண்டை சச்சரவும் வைத்துக் கொள்ளாமல், அனைவரையும் தனது காமெடி பேச்சால் வழிநடத்துகிறார் கஞ்சா கருப்பு. எலிமினிஷன் பிரிவில் நிச்சயம் பரணி தான் வெளியேற்றப்படுவார் என்று போட்டியாளர்கள் அனைவரும் ஓப்பனாகவே பேசத் தொடங்கிவிட்டனர். இவ்வளவு ஏன்... பரணியே 'விட்டால் போதும் டா சாமி' என்ற நிலையில் தான் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ரெடியாக இருந்தார். நிச்சயம் பார்வையாளர்களும் பரணிக்கு ஆதரவாக வாக்களிப்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அவர் தான் கேமரா முன்பே வருவதில்லையே. பின், அவரால் எப்படி மக்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுக்க முடியும்?

ஆனால், முடியும் என்று தனது இரண்டாவது எலிமினேஷனில் நிரூபித்துள்ளது பிக்பாஸ் குழு. போட்டியாளர்கள் அனைவரின் ஆதரவும் இருந்த, மக்கள் அதிகம் வாக்களித்து காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கஞ்சா கருப்பை வெளியேற்றி இருக்கிறது பிக்பாஸ் குழு.

இப்போது வாசகர்களாகிய உங்களாலேயே இதன் காரணத்தை அறிந்திருக்க முடியும். எல்லோரிடமும் சகஜமாக, அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த கஞ்சா கருப்பினால் அங்கே பிரச்சனை எப்படி வரும்? எப்படி அங்கு விவாதம் வரும்? அதுவே, யாருக்கும் பிடிக்காத பரணியை அங்கு இருக்க வைத்தால்...? என்ன ரணகளம் ஆகும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.

இதுதான் பிக்பாஸில் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. இதைத் தான் நான் முதல் பத்தியில் கூறியிருந்தேன். வட்டிக்கு கடன் வாங்கி சிக்கியவர்களை விட, மிகவும் பரிதாபமாக இருக்கப் போகிறது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களின் நிலைமை. சிலர் அதிக பணம் கிடைக்கும் என்பதாலும், சில புகழ் பெறலாம் என்பதாலும் 'பக்கா' அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல், மேல் ஏறி, சுவர் தாண்டி பிக்பாஸ் வீட்டை விட்டு தப்பிக்கும் அளவிற்கு வந்துவிட்டார் பரணி. மற்றவர்களுக்கும் 'நாம் எந்தளவிற்கு சிக்கிக் கொண்டோம்' என்று இனி தான் தெரியவரும்.

இதன் உச்சக்கட்டம் எங்கு போய் முடியும் தெரியுமா? தினம் தினம் இந்த பிக்பாஸ் ஷோவை பார்க்கும் மக்களுக்கு, 'நம்மை பற்றி நம் குடும்பத்தார் மற்றவரிடம் என்ன கூறியிருப்பார்?, இப்படி பேசியிருப்பாரோ, அப்படி பேசியிருப்பாரோ?' என்ற குரூர சிந்தனை வேரூன்றும். அது நாளாக நாளாக படர்ந்து, உறவுகளுக்கிடையே தீர்க்க முடியா சிக்கல்களை உருவாக்கும், குடும்பங்கள் பிரியும். இதுவே நிதர்சன உண்மை!.

இனிவரும் நாட்களில் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

Kamal Haasan Bigg Boss Aarthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment