FIM எனப்படும் Federation Internationale de Motocyclisme நடத்திய மோட்டார் சைக்கிள் உலகக் கோப்பையில் பெங்களூருவைச் சேர்ந்த இந்திய இளம் வீராங்கனை ஐஸ்வர்யா(23) முதன் முதலாக சாம்பியன் பட்டம் பெற்றிருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தியில், பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா (23), FIM மோட்டார் சைக்கிள் உலகக் கோப்பையில் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டார். துபாயில் நடைபெற்ற முதல் சுற்றில் வெற்றிப் பெற்ற பிறகு, போர்சுகளில் நடந்த ரேஸில் மூன்றாம் இடமும், ஸ்பெயினில் ஐந்தாம் இடமும், ஹங்கேரியில் நான்காம் இடமும் பிடித்த ஐஸ்வர்யா, ஒட்டுமொத்தமாக ஜூனியர் பிரிவில் 46 புள்ளிகள் பெற்று கோப்பையை வென்றார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐஸ்வர்யாவின் செயல்பாடுகள் குறித்து FIM சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
பெண்கள் பிரிவில், அதிக புள்ளிகள் பெற்று ஐஸ்வர்யா நிறைவு செய்தார். ஆனால், நான்கு வகை ரேஸிலும் பங்கேற்ற ஒரே பெண் வீராங்கனை ஐஸ்வர்யா மட்டுமே.
துபாய் ரேஸில், அவர் வெற்றிப் பெற்றார். வெற்றிப் பெற்ற ஒரே பெண் ரேஸர் அவர் மட்டுமே.
போர்ச்சுகலில், மூன்று பெண் ரைடர்களில் அவர் மூன்றாவதாக வந்தார், ஸ்பெயினில் 5 பெண் ரைடர்களில் ஐந்தாவதாக வந்தார், ஹங்கேரியில் 4 பெண் ரைடர்களில் நான்காவதாக வந்தார்.
நிலைமை இப்படியிருக்க, ஐஸ்வர்யா நான்கு ரேஸ்களையும் முழுமையாக நிறைவு செய்ததால், அவரால் நிறைய புள்ளிகள் சேகரிக்க முடிந்தது. ஆகையால் தான், அவர் முதல் இடம் பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக FIMன் மீடியாவுக்கான செய்தித் தொடர்பாளர், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், "பெங்களூரைச் சேர்ந்த அந்த டூ வீலர் நட்சத்திரத்தை போல், மற்ற பைக் ரைடர்களுக்கு அதிக ஆதரவு கிடைப்பதில்லை.
நிறைய ரைடர்களுக்கு, FIM பஜாஸ் உலகக் கோப்பையில் பங்கேற்க நிதி ஒரு கேள்வியாக அமைகிறது. ஐரோப்பாவில் நடக்கும் இந்த மொத்த சீசனையும் முழுமையாக நிறைவு செய்வது என்பது அவ்வளவு சாதாரணமல்ல. ஐஸ்வர்யா டிவிஎஸ் நிறுவனத்தின் அங்கமாக இருக்கிறார். அதனால் தான் உலகக் கோப்பையில் நான்கு சுற்றுகளையும் அவரால் முழுதாக நிறைவு செய்ய முடிந்தது.
மற்ற ரைடர்கள் எந்த ஒப்பந்தத்திலும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தாங்களாகவே கலந்து கொள்கின்றனர்" என்றார்.
ஐஸ்வர்யா நான்கு சுற்றுகளையும் முழுவதும் முடித்திருந்தாலும், அவற்றில் சில சுற்றுகளில் நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டதற்கு அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
துபாயை தவிர, மற்ற மூன்று சுற்றுகளிலும் பங்கேற்ற ஒரே பெண் போட்டியாளர் ஐஸ்வர்யா மட்டுமே. இவற்றில் கடைசி இடம் பிடித்த ஐஸ்வர்யா தனக்கு முன் சென்ற போட்டியாளரை விட 50 நிமிடங்கள், 60 நிமிடங்கள் மற்றும் 40 நிமிடங்கள் கூடுதலாக நேரம் அதிகம் எடுத்து சுற்றை நிறைவு செய்திருக்கிறார் என்று FIM குறிப்பிட்டுள்ளது.
டிவிஎஸ் தவிர்த்து, சித்வின், மவுண்டெய்ன் டியூ, ஸ்காட் மோட்டார்ஸ்போர்ட்ஸ் இந்தியா, கே&என், கல்ட் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிக்ராக் டர்ட் பார்க் உள்ளிட்ட பல தரப்பு ஆதரவும் ஐஸ்வர்யாவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.