பெர்த்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், ஆஸ்திரேலியே அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 403 ரன்களும், ஆஸ்திரேலியா 662 ரன்களும் எடுத்தன. 259 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் கேப்டன்ஷிப் செய்வது இதுவே முதன் முறையாகும். கடந்த முறை 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வி குறித்து பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், "இத் தோல்வியால் பென் ஸ்டோக்ஸ், நிச்சயம் இங்கிலாந்து அணியை விட அதிகம் வேதனைபட்டிருப்பார் என நினைக்கிறேன். ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து வெல்ல முடியும் என நான் நினைக்கவில்லை" என்றார்.
வெற்றி குறித்து பேட்டியளித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், "இப்போட்டியில் எனது பெர்ஃபாமன்ஸ் குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன். மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிப் பெற வைத்ததற்காக எனது வீரர்கள் குறித்து பெருமைப்படுகிறேன். நாங்கள் டாஸ் வெல்லவில்லை. ஆனால், பெர்த்தில் ஆடுவது மிக கடினமாக இருந்தது. இதற்கு முன்னதாக பெர்த்தில் இப்படியொரு சூழல் நிலவி நாங்கள் பார்த்ததில்லை. எங்கள் வீரர்கள் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்" என்று புகழாரம் சூட்டினார்.