ஆஸ்திரேலிய நீச்சல் அணியின் பயிற்சியாளர் ஸ்காட் வோல்கர்ஸ், எண்ணற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 59 வயதான ஸ்காட் வோல்கர்ஸ், நீச்சலில் ஒலிம்பிக் சாம்பியன்களை உருவாக்கியவர். இவரிடம் உலகம் முழுவதிலும் இருந்து பலரும் நீச்சல் பயிற்சி பெறுகின்றனர். ஆனால், தன்னிடம் பயிற்சி பெறும் இளம் பிள்ளைகள் பலருக்கும் இவர் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். ஆண், பெண் என யாரையும் விட்டுவைக்காது அவர்களிடம் தனது பாலியல் இச்சைகளை நிறைவேற்றி இருக்கிறார். இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், நேற்று(அக்.,27) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம்(நவம்பர் 13) குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அம்மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்காட் கருத்து தெரிவிக்கையில், "கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற காரணங்களால் நான் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறேன். எந்தவித ஆதாரமும் இன்றி என் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சுசி ஓ'நீல் என்பவருக்கு ஸ்காட் தான் பயிற்சியாளராக இருந்துள்ளார். அதேபோன்று, இருமுறை ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் சாம்பியன் பட்டம் வென்ற சாம் ரைலேவுக்கும் ஸ்காட் தான் பயிற்சி அளித்துள்ளார்.
முன்னதாக, இதேபோன்றதொரு குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில், 2002-ஆம் ஆண்டும் ஸ்காட் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போதிய ஆதாரம் இல்லாததால், அவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், 16 வயதுக்கு உட்பட்டோருக்கு அவர் பயிற்சி அளிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.