/indian-express-tamil/media/media_files/2025/05/27/xDgowsv24HG1PohtdmHS.jpg)
சி.எஸ்.கே போட்டி என்றால், கள்ளச் சந்தையில் பல ஆயிரம் ரூபாய் கொடுத்தும் டிக்கெட் வாங்க ரசிகர்கள் வரிசை கட்டினார்கள். ஆனால் இம்முறை, ஒரிஜினல் விலையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கக் கூட ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்திய மண்ணில் ஐ.பி.எல் எனும் டி20 லீக் தொடர் அரங்கேறிய காலம் தொட்டு ஆதிக்கம் செலுத்திய அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே). 5 ஐ.பி.எல் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் என டி20 லீக் வரலாற்றில் மற்ற எந்த அணிகளும் இன்றுவரை படைக்காத சாதனைகளை படைத்து சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. அவர்களின் திட்டங்கள், வியூகங்களை பல அணிகள் காப்பி அடித்துள்ளன.
ஆனால், ஐ.பி.எல் 2025 தொடரில் சி.எஸ்.கே அணி மற்ற அணிகளிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தாங்கள் அணிந்திருக்கும் ஜெர்சியில் 5 நட்சத்திரங்களை பதித்த அவர்கள், இந்த சீசனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தவற விட்டனர். மெச்சும் படியான மட்டை சுழற்றல், புலி போல் பாய்ந்து எடுக்கப்படும் கேட்சுகள், கடைசி நிமிடம் வரை படபடப்பு, பதற்றம், ரசிகர்களை பி.பி மாத்திரை தேட வைக்கும் ஆட்டம் போன்றவை இந்த சீசனில் அதிகம் இல்லை.
சி.எஸ்.கே போட்டி என்றால், கள்ளச் சந்தையில் பல ஆயிரம் ரூபாய் கொடுத்தும் டிக்கெட் வாங்க ரசிகர்கள் வரிசை கட்டினார்கள். ஆனால் இம்முறை, ஒரிஜினல் விலையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கக் கூட ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதற்கு அணியின் தொடர் தோல்விகளே காரணம். அது ரசிகர்களை சோர்வடைய செய்தது. பெரும் எதிர்பார்ப்போடு டிக்கெட் வாங்கியவர்கள் ஏமாற்றத்துடனும், மனக் குமுறலுடனும் வீடு சென்றனர். ஆனாலும், தோனியின் மீதான பாச பந்தமும், அணியின் மீதான விசுவாசமும் அவர்களை விட்டு நீங்கவில்லை. சி.எஸ்.கே மீண்டும் எழுச்சி காணும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் இருக்கிறார்கள்.
சி.எஸ்.கே அணி ஐ.பி.எல் தொடரில் 12 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், அதில் 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) கோப்பையை முத்தமிட்டுள்ளது. 5 முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. அந்த அணி 2020 ஆம் ஆண்டில் தான் 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், அடுத்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றது. பிறகு 2022-ல் 9-வது இடத்தை பிடித்தது. எனினும், அடுத்த சீசனில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, மும்பை இந்தியன்ஸ் சாதனையை சமன் செய்தது.
இதன்பிறகு, கடந்த சீசனில் 5-வது இடத்தை பிடித்த சி.எஸ்.கே, இந்த சீசனுக்கு முன்னதாக நடந்த மெகா ஏலத்தில் அதிரடி கலந்த இளம் வீரர்களை கைப்பற்றுவதில் கோட்டை விட்டது. மூத்த வீரர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்து வழக்கமான ஏல உத்தியை பயன்படுத்தியது. அது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 16 சீசன்களில் ஆகியிருக்கும் சி.எஸ்.கே, இந்த முறை தான் மோசமான தோல்விகளைப் பெற்றுள்ளது.
இந்த சீசனில் சி.எஸ்.கே-வின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று அவர்களின் மோசமான பேட்டிங். தங்களின் கோட்டையான சேப்பாக்கத்தில் கொல்கத்தா 103/9 என்ற கணக்கில் அவர்களை மடக்கியது. இதேபோல், ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியது சி.எஸ்.கே. இதற்கு முக்கிய காரணமாக அவர்களின் பவர்பிளே செயல்திறன் குறிப்பிடப்படுகிறது.
பவர்பிளே-யில் அவர்களின் பேட்ஸ்மேன்கள் எதிரணி பவுலர்களிடம் அடங்கிப் போய் விடுகிறார்கள். டாப் ஆடர் வீரர்கள் பந்தை விரட்டுவதில் திணறினார்கள். கேப்டன் ருதுராஜ் தொடக்க வீரராக இல்லாமல் களமிறங்கியதும், காயம் காரணமாக அவர் விலகியதும் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. தோனி கேப்டன்சி பொறுப்பை ஏற்றாலும், அவரது உடற்தகுதி மற்றும் முழு ஐ.பி.எல் சீசனை கையாளும் அவரின் திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அவரது தலைமையிலான அணியில் நிலையான ஆடும் லெவன் வீரர்கள் இல்லை. பெரும்பாலும் ஆடும் லெவன் வீரர்களை மாற்ற மாட்டார்கள் என அறியப்பட்ட சி.எஸ்.கே இந்த சீசனில் ஒவ்வொரு போட்டிக்கும் மாற்று வீரர்களை களமிறங்கியது. இதனால் அவர்களின் வீரர்கள் அடித்து ஆடுவதில் தயக்கம் கட்டினார். இந்த சீசனில் சி.எஸ்.கே அணியினர் முதல் ஆறு ஓவர்களில் சராசரியாக 45 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இது இந்த சீசனில் எடுக்கப்பட்ட 57 ரன்கள் சராசரியை விட மிகக் குறைவு.
மெகா ஏலத்திற்கு ரூ. 55 கோடியிடன் சென்ற சி.எஸ்.கே எந்த தாக்கத்தை ஏற்படுத்தும், டி20 ஆட்டத்தை மாற்றும் வீரர்களையும் தேர்வு செய்யத் தவறிவிட்டது. நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திர மற்றும் டெவன் கான்வே உட்பட அவர்களின் டாப் ஆர்டர் தேர்வுகள் பவர்பிளேயில் தேவையான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். இது பல போட்டிகளில் அணியின் தொடக்க சரிவுகளுக்கு வழிவகுத்தது. மிடில் ஆர்டரும் தொடர்ந்து விளையாடத் தவறிவிட்டது. நெருக்கடியான சூழ்நிலைகளில் தெளிவான ஃபினிஷர்கள் யாரும் முன்னேறவில்லை.
வரலாற்று ரீதியாக கூர்மையான ஃபீல்டிங்கிற்கு பெயர் பெற்ற சி.எஸ்.கே இம்முறை அந்த பெருமையை சொந்தமாக்கவில்லை. கோட்டை விடப்பட்ட கேட்சுகள், மோசமான ஃபீல்டிங் இந்த சீசனில் வழக்கமான அம்சங்களாக இருந்தது. இது அவர்களின் பந்துவீச்சுப் போராட்டங்களை அதிகப்படுத்தியது. பந்து வீச்சில், சி.எஸ்.கே பெரிய அளவில் கட்டுப்படுத்தவில்லை. அவர்களின் பந்து வீச்சாளர்கள் டெத் ஓவர்களில் அடிக்கடி ரன்களை கசியவிட்டனர். மேலும், ஒரே ஓவரில் அதிக ரன்களை எடுப்பதை அவர்களால் தடுக்க முடியவில்லை. இது பேட்டிங் யூனிட்டில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
ஆறுதல் தரும் விடயமாக சிறந்த பந்து வீச்சாளர் நூர் அகமது இந்த சீசனில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணி வீரராக இருக்கிறார். மற்றொரு ஆறுதல் தரும் விடயமாக, டெவால்ட் பிரெவிஸ் மற்றும் ஆயுஷ் மத்ரே போன்றவர்கள் மூலம் சிஎஸ்கே பேட்டிங் துறையில் முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காட்டியது. ஆனால், இந்த சீசனின் நடுப்பகுதியில் சி.எஸ்.கே தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளைச் சந்தித்தது. இப்படி அவர்கள் தோல்வியடைவது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை. அந்த சரிவில் அவர்களின் நெட் ரன்ரேட்டும் -1.302 ஆகக் குறைந்தது. இது மற்ற எந்த அணிகளை விடக் குறைவாகும்.
இந்த மோசமான தோல்வி சி.எஸ்.கே அணிக்குள் நிறைய வாதங்களை எழுப்பி இருக்கும். அடுத்த சீசனில் அவர்கள் கட்டாயமாக மறுகட்டமைப்பை பரிசீலிக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். ஆனால், ஒன்று தெளிவாக உள்ளது. அது பழைய சி.எஸ்.கே மீண்டும் உச்சத்திற்குத் திரும்ப விரும்பினால் அவர்கள் இந்த வீழ்ச்சியில் இருந்து பரிணமிக்க வேண்டும். எனவே, இந்த சீசன் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறதா அல்லது ஒரு மாற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ - பெங்களூரு அணிகள் லக்னோவில் மோதுகின்றன. குஜராத், பஞ்சாப், பெங்களுரு, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.