ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் 4-வது சீசன் கொச்சியில் நேற்று(நவ.17) தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி சமனில் முடிவடைந்தது.
கவுகாத்தியில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடட்- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.
இதைத் தொடர்ந்து, 3-வது ‘லீக்’ ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (19-ஆம் தேதி) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னையின் எஃப் சி - கோவா அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் ஐ.எஸ்.எல். தொடரில் இதுவரை மொத்தம் 6 ஆட்டத்தில் விளையாடி உள்ளன. இதில் சென்னை 3 ஆட்டத்திலும், கோவா 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் முதல் போட்டியில் ஆடுவதால், வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளது சென்னை அணி.
கடந்த 3 சீசனிலும் சென்னைஅணிக்கு மட்டெராசி (இத்தாலி) பயிற்சியாளராக இருந்தார். இந்த சீசனில் இருந்து இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கிரேக்கோரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
2015-ஆம் ஆண்டின் சாம்பியனான சென்னை அணி, கடந்த முறை அரை இறுதிக்கு நுழைய முடியாமல் வெளியேறியது. இதனால், இம்முறை மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு போட்டியையும் அணுக சென்னை அணி முடிவு செய்துள்ளது.