பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற தேசிய அளவிலான ஃபார்முலா கார் மற்றும் பைக் பந்தயத்தில் வீரர்கள் சீறிப்பாய்ந்து தங்களது திறமைகளை நிரூபித்தனர்.
ஜே.கே.டயர்ஸ், எப்.எம்.எஸ்.சி.ஐ. இணைந்து நடத்தும், 26 ஆம் ஆண்டு தேசிய கார் சாம்பியன் முதல் சுற்று போட்டி கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வே ட்ராக்கில் நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடந்த இப்போட்டியில் டெல்லி, பெங்களூரு, ஐதராபாத்,சென்னை, புனே என நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
எல்.ஜி.பி., பார்முலா 4 பிரிவின், 15 லேப்கள் கொண்ட முதல் போட்டியில், டார்க் டான் அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். முடிவில் அந்த அணியின் திஜில்ராவ், ஆர்யா சிங், தில்ஜித் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன. ப்ரீமியர் எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் ருஹான் ஆல்வா மற்றும் திஜில் ராவ் ஆகியோர் தலா ஒரு பந்தயத்தில் வெற்றி பெற்றனர். போர்க்களம் போல கார்கள் சீறிப்பாய்ந்தது . அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முதல் பந்தயத்தில் எம்ஸ்போர்ட்டின் பெங்களூரைச் சேர்ந்த ருஹான் அசத்தலான காரை ஓட்டி கோப்பையை கைப்பற்றினார். இதேபோல் 2வது பந்தயத்தில் திஜில் மிகவும் திரிலிங்காக காரை ஓட்டிச் சென்று முதலிடம் பிடித்தார்.
ஜே.கே டயர் ராயல் என்பீல்டு ஜி.டி கோப்பையில் பெங்களூர் வீரர்கள் மொத்த இடத்தையும் தட்டிச் சென்றனர். முறையே அபிஷேக் வாசுதேவ், உல்லாஸ் நந்தா ,சம்ருல் சுபைர் ஆகியோர் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து கோப்பையை கைப்பற்றினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.