தமிழ்நாடு பிரீமியர் லீக் 2017 தொடரில், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் (எலிமினேட்டர் சுற்று) திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த காரைக்குடி காளையும், கோவை கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற கோவை கேப்டன் முரளி விஜய், பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்படி, காரைக்குடி அணியின் தொடக்க வீரர்களாக விஷால் வைத்யாவும், அனிருதாவும் களமிறங்கினர். 2-வது ஓவரில் அனிருதா 15 ரன் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை முரளிவிஜய் வீணடிக்க, அனிருதா அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார். விஷால் வைத்யா 7 ரன்னில் வெளியேறினாலும், அடுத்து வந்த ஆதித்யா, அனிருதாவுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சிக்ஸரும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்ட அனிருதா, 79 ரன்களில் (36 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் ஆதித்யாவும் (31 ரன், 29 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். 10 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது.
இதைத் தொடர்ந்து கேப்டன் பத்ரிநாத்தும், ஷாஜகானும் அணியின் ஸ்கோரை அதே வேகத்தில் கொண்டு சென்றனர். 20 ஓவர் முடிவில் காரைக்குடி அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. பத்ரிநாத் 42 ரன்களுடனும், ஷாஜகான் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
194 எனும் கடின இலக்கை துரத்திய கோவை அணியில், சூர்யபிரகாஷ் ஒரு ரன்னிலும், அனிருத் சீதாராம் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் கேப்டன் முரளிவிஜய்யுடன் விக்கெட் கீப்பர் ரோஹித் கைக்கோர்த்தார்.
பாரபட்சம் பார்க்காமல் காரைக்குடி பவுலர்களை பஞ்சர் செய்தார் ரோஹித். சிக்ஸர் அடித்து தான் தனது ரன் கணக்கையே அவர் துவக்கினார். அவரை எப்படிக் கட்டுப்படுத்துவது என்றே பவுலர்களுக்கு தெரியவில்லை. விஜய் 34 ரன்களில் ரன்-அவுட் ஆக, கோவை அணிக்கு நெருக்கடி உண்டானது.
குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும், ரோஹித்தை மட்டும் காரைக்குடி பவுலர்களால் அசைக்க முடியவில்லை.
கடைசி ஓவரில் கோவை அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் வீசினார். முதல் பந்தை நோ-பாலாக வீச, அதை ரோஹித் சிக்சருக்கு அனுப்பினார். எக்ஸ்டிரா வகையிலும் ஒரு ரன் கிடைத்தது. இதன் பின்னர் மீண்டும் வீசப்பட்ட ஃப்ரீ ஹிட் பந்தும் நோ-பாலாக மாற, அந்த பந்தை மைதானத்திற்கு வெளியே தூக்கியடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த சிக்சர் மூலம் சதத்தையும் ரோஹித் நிறைவு செய்தார்.
முடிவல், கோவை அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்குடி அணி தொடரில் இருந்து வெளியேறியது. 26 வயதான ரோஹித் 102 ரன்களுடன் (46 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) களத்தில் இருந்தார். டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் அதிவேக சதம் இதுவாகும். சென்னையைச் சேர்ந்த ரோஹித்தின் முழு பெயர் ரவி குமார் ரோஹித் ஆகும்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை நெல்லையில் நாளை எதிர்கொள்ள இருக்கிறது.