நேற்று புனே அணியை மும்பை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. பரபரப்பாக நடந்த இந்த இறுதிப் போட்டி குறித்த ட்விட்டர் ஹேஷ்டேக்கை, இன்னொரு ஹேஷ்டேக் சில மணி நிமிடங்களில் ஓவர்டேக் செய்தது என்றால் நம்புவீர்களா? ஆம்! அது சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் ஹேஷ்டேக் தான்.
நேற்று மும்பை அணி வென்றவுடன், சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஃபைனலில் வெற்றிபெற்றதற்காக, மும்பை அணிக்கு வாழ்த்து தெரிவித்து முதல் ட்வீட் போடப்பட்டது. அடுத்து, புனே அணிக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த சீசனில் சி.எஸ்.கே-யின் ரீ என்ட்ரி குறித்த ட்வீட்கள் வரத் தொடங்கின.
"லயன்ஸ், விசில் போட ரெடியா? இந்தச் சத்தங்களைத் தாண்டி, விசில் போட வேண்டும். எங்களது அற்புதமான சொந்த மண் (சென்னை சேப்பாக்கம்), அடுத்த ஆண்டு முதல் மீண்டும் வந்துவிடும். அடுத்த சீசனில் நாங்கள் இருப்போம்" என்று வரிசையாக ட்வீட்களைத் அள்ளித் தெளித்தது.
குறிப்பாக, ஒவ்வொரு ட்வீட்க்கும் #ManyHappyReturnsOfCSK என்ற ஹேஷ் டேகை இணைத்து ஸ்டேட்டஸ் தட்ட, மும்பை இந்தியன்ஸ் வெற்றியை ஓவர்டேக் செய்து, #ManyHappyReturnsOfCSK என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது. தீவிர சி.எஸ்.கே ரசிகர்களான இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் ஜெய் போன்றவர்களும், சென்னை அணியின் ரீ என்ட்ரி குறித்து ட்வீட்டினர்.
ஏற்கனவே, சிஎஸ்கே வருகை குறித்த டீவீட்டுக்களயும், மீம்ஸ்களையும் பதிவிட்டுக் கொண்டிருந்த சென்னை ரசிகர்கள், சிஎஸ்கே நிர்வாகத்தின் இந்த டீவீட்டுகளை அடுத்து, 'நா வந்துட்டேன்னு சொல்லு..திரும்பி வந்துட்டேனு சொல்லு... 2 வருஷத்துக்கு முன்னாடி எப்டி போனானோ...அப்டியே திரும்ப வந்துட்டான்னு சொல்லு' என சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டனர்.