ஆண்கள் பேட்மிண்டனில் உலக சாம்பியன் விக்டர் அக்ஸல்சனுக்கும், இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்திற்கும் நேற்று நடந்த பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில், ஸ்ரீகாந்த் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி, உலகின் நம்பர் ஒன் வீரராக விளங்கும் டென்மார்க் வீரர் விக்டர் அக்ஸல்சனுக்கும், இந்தியாவின் 24 வயதான ஸ்ரீகாந்த் கிடம்பிக்கும் இடையே நடைபெற்றது. 55 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் 14-21, 22-20, 21-7 என்ற புள்ளிக்கணக்கில் கிடம்பி வெற்றிப் பெற்றார்.
உள்ளூர் மக்களின் ஆதரவோடு களமிறங்கிய விக்டர், முதல் செட்டை சிறப்பாக விளையாடி 14-21 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டெழுந்து அசுரத்தனமாக ஆடிய ஸ்ரீகாந்த, இரண்டாவது செட்டை 22-20 என்றும், மூன்றாவது செட்டை 21-7 என்ற கணக்கிலும் வென்று உலக சாம்பியன் விக்டருக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த வெற்றியின் மூலம், ஸ்ரீகாந்த் அரையிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றார்.
இருப்பினும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினார். தென் கொரியாவின் சான் வான் ஹோவிடம் மோதிய பிரணாய் 21-13, 21-18 என்ற செட் கணக்கில் தோல்வி பெற்றார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பானின் யாமகுச்சியிடம் 10-21 13-21 என்ற செட் கணக்கில் சரண்டர் ஆனார்.
இந்த தோல்வி குறித்து சாய்னா கூறுகையில், "ஓய்வு எடுக்க எனக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. அதிகாலை 2 மணிக்கு நான் இதுவரை விளையாடியதே இல்லை. அதிகாலை 3 மணிக்கு தூங்கியதே இல்லை. இதனால் நான் மந்தமாக இருந்தேன். என்னுடைய அசைவுகள் சிறப்பானதாக இல்லை. இருப்பினும், யாமகுச்சி அற்புதமாக விளையாடினார் என்பதையும் நான் இங்கு கூறியே ஆக வேண்டும். அவர் தொடர்ந்து நிலையாக ஆடி வருகிறார். எனது அடுத்தடுத்த போட்டிகளுக்கு நான் கடுமையாக பயிற்சி செய்து சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்" என்றார்.