/indian-express-tamil/media/media_files/2025/02/23/GRLtpQVF8pqNEi6LNGBe.jpg)
துபாயில் உள்ள ஐ.சி.சி அகாடமிக்கு வெளியே இந்திய அணியின் பயிற்சி அமர்வைக் காணக் கூடிய நூற்றுக்கணக்கான ரசிகர்களை கட்டுப்படுத்த பாதுகாவலர்கள் பெரிதும் போராடினர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Tickets as gifts, to screenings in cinemas, to big match excitement: Dubai braces for India versus Pakistan humdinger
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதனைக் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
30,000 இருக்கைகள் கொண்ட துபாய் சர்வதேச மைதானத்தில் ஒரு இருக்கைக்கான மலிவான டிக்கெட்டின் விலை 12,000 அல்லது 500 திர்ஹாம்கள் ஆகும். டான்யூப் குழுமத்தின் துணைத் தலைவரான அனிஸ் சஜன், தனது 100 பணியாளர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் ரமலான் பரிசாக, கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகளை வழங்குகிறார்.
"சாதாரண விளையாட்டு என்பதற்கும் மேலாக கிரிக்கெட் போட்டி பார்க்கப்படுகிறது. எல்லை தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் உணர்வு இது. எங்கள் பணியாளர்கள் பலர் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனால், போட்டிக்கான டிக்கெட் விலை மற்றும் அதனை பெறுவதில் இருக்கும் டிமாண்ட் காரணமாக, அவர்களுக்கு போட்டியை நேரில் காண்பது தொலைதூர கனவாக இருந்தது. தங்களுக்கு பிடித்தமான வீரர்கள் விளையாடுவதை நேரில் காண்பது, அவர்களுக்கு மறக்க முடியாது அனுபவமாக இருக்கும்" என சஜன் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிட்டத்தட்ட 3.7 மில்லியன் இந்தியர்கள் மற்றும் 1.7 மில்லியன் பாகிஸ்தானியர்கள் இருப்பதால், டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகிறது.
எனினும், சஜன் மட்டுமே தங்கள் ஊழியர்களுக்கு டிக்கெட்டுகளை பரிசாக வழங்கவில்லை.
"ரமலானின் போது எங்களின் உரிமையாளர்களிடமிருந்து எப்போதும் பரிசுகளைப் பெறுவோம். இம்முறை இங்கு மேட்ச் நடப்பதை முன்கூட்டியே அறிந்ததால், எங்கள் முதலாளிகள் போட்டிக்கான டிக்கெட்டுகளை பரிசாக அளித்துள்ளனர். இல்லையென்றால், நாங்கள் டிக்கெட் வாங்க முடியாது"என்று துபாயில் பணிபுரியும் ராகேஷ் கூறினார்.
மேலும், திரையரங்கிலும் போட்டிக்கான நேரலை ஒளிபரப்பப்படுகிறது. பல்வேறு ஊழியர்கள் இன்றைய தினம் விடுமுறை விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால், பாகிஸ்தானுக்கு இது இக்கட்டான போட்டியாக கருதப்படுகிறது. ஐ.சி.சி நிகழ்வை நடத்துவதற்கு ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக காத்திருந்த பிறகு, முகமது ரிஸ்வானின் அணி முன்கூட்டியே வெளியேறி விடுமா என்கிற நிலையும் உருவாகியுள்ளது. "சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டுமே முக்கியம் அல்ல. எங்கள் பரம போட்டியாளரை வெல்வதும் மிக முக்கியம்" என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் ஸ்போர்ட்ஸ் சிட்டிக்கு செல்லும் சாலைகள் அனைத்தும், பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மூடப்பட்டுள்ளது.
சாலை வழியாக 46 நிமிட தூரத்தில் உள்ள ஷார்ஜா, 1980கள் மற்றும் 90களில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான முக்கிய தலமாக இருந்தது. துபாயில் நடந்த ஒரு நாள் போட்டிகளில், 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியாளரன இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு முன்னதாக இரு நாட்டு வீரர்களும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை. ஐ.சி.சி அகாடெமியில் இந்திய வீரர்களும், துபாய் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களும் பயிற்சி எடுத்தனர். இது நாட்டு ரசிகர்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்னும் நோக்கில், உள்ளூர் இந்திய மற்றும் பாகிஸ்தானிய குழுவினர் தனித்தனியாக போட்டியை திரையிட முடிவு செய்துள்ளனர்.
"இந்தியா - பாகிஸ்தானுக்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த இரு அணிகளும் விளையாடும் போது பரபரப்பான போட்டியாக இருக்கும். எல்லோரும் அதை பார்த்து ரசிக்கிறார்கள். இத்தனை பேர் போட்டியை ரசித்துப் பார்க்கும் போது அதனை மிகைப்படுத்தப்பட்டது என அப்படி கூற முடியும்? இது ஒரு பெரிய போட்டி என்று நான் நினைக்கிறேன். எனினும், இறுதிப்போட்டி மிகப் பெரிதாக இருக்கும்" என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
"அழுத்தம் இல்லாமல் விளையாட்டு இல்லை. நியூசிலாந்து அணியிடம் நாங்கள் தோல்வியை தழுவினோம். தகுதி பெறுவதற்கு எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி அல்லது தோல்வி என்பதை கடந்து, அங்கள் வீரர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் காட்ட காத்திருக்கின்றனர்" என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜாவேத் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.